சினிமா
பழம்பெரும் நடிகர் திலீப்குமாருக்கு அவசர பிரிவில் சிகிச்சை
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல்நலக் குறைவால் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #DilipKumar
இந்தி நடிகர் திலீப்குமார் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமாருக்கு (95 வயது) கடந்த 5-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மும்பை பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் திலீப்குமாருக்கு நெஞ்சில் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.
மருத்துவ நிபுணர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில், திலீப்குமாருக்கு லேசான நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதை அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்தார். இதையடுத்து, டாக்டர்கள் திலீப்குமாரை அவசர பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோப்பு படம்
இதுபற்றி அந்த மருத்துவமனையின் துணை தலைவர் கூறுகையில், ‘சிகிச்சைக்கு பின்னர் திலீப்குமாரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், அவர் நலமுடன் இருக்கிறார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்’ என்றார். #DilipKumar