சினிமா

சிறந்த நடிகர் யார்? பிடித்த நடிகர் யார்? ரசிகர்களின் கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த கார்த்தி

Published On 2018-07-09 14:15 GMT   |   Update On 2018-07-09 14:15 GMT
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். #Karthi
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.  சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இதில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் இந்த வாரம் ஜூலை 13ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தனது பேஸ்புக் மூலம் ரசிகர்களுடன் பேசினார்.

அதில், ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்களுக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும்’ என்றார். மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். 

நேரடி தெலுங்கு படம் எப்போது?
கதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் விரைவில் நடிப்பேன்.

மீண்டும் போலீஸ் படத்தில் நடிப்பீர்களா?
நல்ல கதை அமைந்தால் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பேன்.

சூர்யாவுடன் எப்போது நடிப்பீர்கள்?
நானும் அண்ணாவும் சேர்ந்து நடித்தால் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள். அந்த அளவிற்கு நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்போம். பாண்டிராஜ் கூட கதை உருவாக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இமான் இசை பற்றி?
இமானுடன் முதல் முறையாக இணைந்திருக்கிறேன். சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார்.

விஜய் பற்றி?
நான் நடித்த பருத்தி வீரன் படத்தை பார்த்து விஜய் என்னை பாராட்டியது மறக்க முடியாது. தலைக்கனம் இல்லாத மனிதர்.

பிடித்த நடிகர்?
நிறைய பேர் இருக்கிறார்கள். ரஜினி, கமல் சாரை பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். அவர்களை எனக்கு பிடிக்கும்.



சிறந்த நடிகர்?
அண்ணா சூர்யாவும், அண்ணி ஜோதிகாவும் தான் சிறந்த நடிகர்கள்.

விவசாயம் பிடிக்குமா?
நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்தான். எனக்கு விவசாயம் பிடிக்கும்.

மேலும் பல கேள்விகளுக்கு கார்த்தி சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
Tags:    

Similar News