சினிமா

வேளச்சேரி துப்பாக்கிச்சூட்டில் சரத்குமார்

Published On 2018-07-02 05:32 GMT   |   Update On 2018-07-02 05:32 GMT
`மயங்கினேன் தயங்கினேன்' படத்தை இயக்கிய எஸ்.டி.வேந்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' படத்தில் நடிகர் சரத்குமார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். #VelacheryThuppakiSoodu #SarathKumar
வடமாநில இளைஞர்களின் அட்டகாசத்தை வெளிக்கொண்டு வரும் `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'

வி.ஆர்.மூவிஸ் சார்பில் டி.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'. எஸ்.டி.வேந்தன் இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஷாம் - சினேகா நடித்த `இன்பா' மற்றும் `மயங்கினேன் தயங்கினேன்' ஆகிய படங்களை இயக்கியவர். 

இந்த படத்தில் நடிகர் சரத்குமார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக, மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை பணிகளை கவனிக்கிறார். இளம் ஜோடிகளாக அர்வி, கேரள வரவு நீரஜா நடிக்கின்றனர்.

தற்போதைய காலகட்டத்தைப் பொறுத்தவரை வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது. 

இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த ஒரு என்கவுண்டர் ஆபரேஷனுக்கு தான் இந்த `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என பெயரிட்டுள்ளனர்.

 

இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால், இந்தப்படத்திற்கு `வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.

படம் குறித்து இயக்குநர் S.T..வேந்தன் கூறும்போது, "காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை. யாரும் போராடுவதில்லை. அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. 

ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும்  என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம்.

இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்" என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #VelacheryThuppakiSoodu #SarathKumar

Tags:    

Similar News