சினிமா
காலா படத்துக்கு தடை விதிக்க மறுப்பு
காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கிற்கு, சென்னை ஐகோர்ட்டு தடை விதிக்க மறுப்பளித்துள்ளது. #Kaala #Rajini #Rajinikanth
சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கரிகாலன் என்ற படத்திற்கான தலைப்பை கடந்த 1996 முதல் 2006 வரை நான் முறையாக பதிவு செய்து புதுப்பித்து வந்தேன். இடையில் புதுப்பிக்கவில்லை.
இந்நிலையில் திடீரென என்னுடைய தலைப்பை வைத்து நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தற்போது காலா என்ற கரிகாலன் என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். நான் என்னுடைய தலைப்பை புதுப்பிக்க வில்லை என்பதால் அந்த தலைப்பை வேறு ஒருவருக்கு மாற்றிவிட்டதாக சங்க நிர்வாகிகள் காரணம் கூறுகின்றனர். அதுபோல காலா என்ற கரிகாலன் படத்திற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ‘இந்த வழக்கு தொடர்பாக போதுமான ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்ய வில்லை. எனவே காலா என்ற கரிகாலன் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகரன் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு வக்கீலின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க வில்லை. வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, எதிர் தரப்புக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.