சினிமா

சினிமாவுக்கு வாலியின் முதல் பாட்டு: சுசீலா பாடினார்

Published On 2019-01-31 16:41 GMT   |   Update On 2019-01-31 16:41 GMT
பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

"வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

"கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

"கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

(1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

"மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

"ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

"வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

"கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.

வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

"நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.
Tags:    

Similar News