கார்
டெஸ்லா

இந்தியாவில் டெஸ்லாவுக்கு சலுகை - மத்திய மந்திரி நிதின் கட்கரி விளக்கம்

Published On 2022-05-03 10:31 GMT   |   Update On 2022-05-03 10:31 GMT
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்திற்கு சலுகை வழங்குவது பற்றி மத்திய மந்திரி நிதின் கட்கரி புது விளக்கம் அளித்து இருக்கிறார். இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
 

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தியை மேற்கொண்டால் நிச்சயம் சலுகைகளை பெற முடியும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார். 

இதுதவிர இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார் மாடல்களை விட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விலை குறையும் என்றும் அவர் உறுதியளித்து இருக்கிறார். டெஸ்லாவுக்கு இந்தியா நிச்சயம் உற்பத்தி தளமாக இருக்கும் என நிதின் கட்கரி பலமுறை தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு நிச்சயம் வரிச்சலுகை அளிக்கப்பட மாட்டாது என்பதையும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதல் டெஸ்லா நிறுவனம் மற்றும் மத்திய அரசிடையே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 2020 ஆண்டிலேயே இந்தியாவில் டெஸ்லா கார் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் டெஸ்லா கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என எலான் மஸ்க் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.



டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை முழுமையாக உற்பத்தி செய்த நிலையில் (Completely Build Units-CBUs) இங்கு இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. எனினும், சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதை மத்திய அரசு விரும்பவில்லை. இந்த நிலையை மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு தயாராக இல்லை.

அதிக இறக்குமதி வரிகள் காரணமாக தனது கார்களை இருமடங்கு விலையில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனமும் விரும்பவில்லை. உலகின் பெரிய நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும் தான் இறக்குமதி வரிகள் அதிகளவில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். 40 ஆயிரம் டாலர்கள் விலை கொண்ட கார்களுக்கு இறக்குமதி வரி 60 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது. இதை விட அதிக விலை கொண்ட கார்களுக்கு வரி மேலும் அதிகமாகும்.

Tags:    

Similar News