ஜூன் மாத விற்பனையில் 9 மடங்கு வளர்ச்சி - ஏத்தர் எனர்ஜி அதிரடி
- ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜூன் மாதம் மட்டும் 3 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது.
- விரைவில் மேம்பட்ட 450X மாடல்களை ஏத்தர் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருவதிலேயே இதனை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு ஏத்தர் நிறுவனமும் இந்திய சந்தையில் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி ஜூன் 2022 மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த மாதத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 3 ஆயிரத்து 231 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையை விட பல மடங்கு அதிகம் ஆகும். 2021 ஜூன் மாதத்தில் ஏத்தர் நிறுவனம் சுமாராக 300 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.
இந்த நிலையில், ஏத்தர் நிறுவனம் புதிய மேம்பட்ட 450X மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி புதிய மாடலில் 3.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம். இது தற்போதைய மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் 2.6 கிலோவாட் ஹவர் பேட்டரியை விட அதிகம் ஆகும்.
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஏத்தர் 450X மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் முறையே 116 கி.மீ. மற்றும் 100 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. அந்த வகையில் புதிய மேம்பட்ட மாடல்கள் அதிக ரேன்ஜ் கொண்டிருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.