இந்திய சோதனையில் சிக்கிய எம்ஜி எலெக்ட்ரிக் கார்
- எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் சிறிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த காரில் டாடா ஆட்டோகாம்ப் நிறுவன பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடலின் சோதனையை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது. புதிய எம்ஜி காம்பேக்ட் எலெக்ட்ரிக் வாகனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் உலிங் ஏர் EV மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த மாடல் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போதைய ஸ்பை படங்களின் படி புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என உறுதியாகி இருக்கிறது. எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. இதன் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
Photo Courtesy: Autocarindia
அளவீடுகளின் படி புதிய எம்ஜி காம்பேக்ட் கார் மாருதி ஆல்டோவை விட அளவில் சிறியது ஆகும். இந்தோனேசிய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடலில் 12 இன்ச் ஸ்டீல் வீல் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.
எம்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் டாடா ஆட்டோகாம்ப் நிறுவனத்தின் பேட்டரியில் இயங்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் பிரபல எலெக்ட்ரிக் கார் மாடலாக விளங்கும் நெக்சான் EV கொண்டிருந்ததை போன்ற பேட்டரி தான் எம்ஜி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.