ஆட்டோமொபைல்
இந்தியாவில் சுங்கச்சாவடிகளே இருக்காது - மத்திய மந்திரி அறிவிப்பு
இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுங்கச்சாவடிகளே இருக்காது என மத்திய மந்திரி அறிவித்து இருக்கிறார்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடிகளே இருக்காது என அறிவித்து இருக்கிறார். தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக ஜிபிஎஸ் முறையிலான கட்டண சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய ஜிபிஎஸ் சிஸ்டம் மூலம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி வேகமாக செல்ல முடியும். முற்றிலும் புதிய கட்டண முறைக்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுக்க அமலாக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.
ஜிபிஎஸ் முறையிலான சுங்க கட்டண வசூலிக்கும் எந்திரம் ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து நிறுவப்பட இருக்கிறது. இந்த சிஸ்டம் வாகன உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக் கொள்ளும்.
அனைத்து பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கட்டாயம் வழங்கப்படுகிறது. எனினும், பழைய வாகனங்களில் இந்த வசதி வழங்கப்படவில்லை. இதனை சரி செய்யும் நோக்கில், அரசாங்கம் மாற்று முறைகளை அறிவிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.