ஆட்டோமொபைல்

கார் ஏ.சி.யில் கவனம் தேவை

Published On 2018-11-25 09:59 GMT   |   Update On 2018-11-25 09:59 GMT
கார் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அதில் பயணிக்கும் போது ஏ.சி. பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். #autotips



இந்தியாவில் கார் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுவது, அதிக சலுகைகளுடன் எளிதில் வாங்கக்கூடிய வாகனங்கள் பட்டியலில் கார் இணைந்திருப்பதே விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

கார் வாங்குவோர், தங்களுக்கு பிடித்த மாடல்களை பற்றி அதிகம் விசாரித்து அதன் பின் புதிய கார் வாங்கினாலும் அவற்றை பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றே கூறலாம். புதிய கார் என்றாலும் அடிக்கடி சிறுசிறு கோளாறுகள் ஏற்படுவதே அதன் பயன்பாட்டில் கவனம் செலுத்தவில்லை என்பதை வெளிப்படுத்தி விடும்.

அவ்வாறு கார்களில் முக்கிய மற்றும் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்றாக ஏ.சி. எனப்படும் குளிர்சாதன வசதி அமைந்திருக்கிறது. காரில் பயணம் செய்வோர் ஏ.சி.யை பயன்படுத்தும் போது எப்படி கவனமாக செயல்பட வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தியிருந்த காரை ஸ்டார்ட் செய்தவுடன் ஏ.சி.யை ஆன் செய்தால், உடனே ஜன்னல் கதவுகளை மூடக்கூடாது. காரினுள் இருக்கும் வெப்பம் வெளியேறும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். 

ஏனெனில் வெயில் காலங்களில், காரில் உள்ள பிளாஸ்டிக் பாகங்கள் ‘பென்சீன்’ எனப்படும் நஞ்சை உமிழ்கின்றன. இது புற்று நோயை ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால் ஏ.சி.யை ஆன் செய்து காரினுள் இருக்கும் வெப்பக்காற்று வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு ஜன்னலை மூடி பயணத்தைத் தொடரலாம்.



மேலும் காரை ஸ்டார்ட் செய்ததும், ஏ.சி. முழு வேகத்தில் இயக்காமல் மெல்ல மெல்ல ஏ.சி.யை அதிகமாக வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது, காரினுள் வெப்பநிலை சீராக இருக்கும்.

இதேபோல நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரில் ஏ.சி.யை போட்டு தூங்கக்கூடாது. ஏனெனில் கார் என்ஜின் ஓடும்போது கார்பன் மோனாக்சைடு வெளியேறும். ஒரே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் காருக்குள் ஏ.சி. பயன்படுத்தும் போது கார்பன் மோனாக்சைடு பரவி உயிருக்கே ஆபத்தாக மாறலாம்.

கார் பார்க்கிங் செய்யும் போது, நேரடி சூரிய வெப்பம் தாக்காத இடமாக பார்த்து நிறுத்துவது நல்லது. அதாவது பேஸ்மென்ட் பார்க்கிங் அல்லது மர நிழல் படர்ந்து இருக்கும் இடங்களில் காரை நிறுத்தும் போது கார் எளிதில் வெப்பமாகாது. ஒருவேளை இப்படியான இடம் கிடைக்காத பட்சத்தில் காரின் ஜன்னல்களை திறந்தபடி வைக்கலாம், இவ்வாறு செய்யும் போது காரில் வெப்பம் வேகம் குறைவாக ஏறும்.

காரில் ஏ.சி. பயன்படுத்திய பின், காரை நிறுத்தும் இடத்தில் கவனமாக ஏ.சி.யை ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாத பட்சத்தில் காரினுள் தூசி சென்று அடுத்தமுறை ஏ.சி.யை இயக்கும் போது காரினுள் துர்நாற்றம் வீசலாம்.

கார் ஏ.சி.யை சீரான இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அல்லது உங்களுக்கு நன்கு அறிமுகான டீலர்களிடம் கொடுத்து கார் ஏ.சி.யை சரியாக சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஏ.சி. நீண்ட நாள் உழைக்கும்.
Tags:    

Similar News