ஆன்மிக களஞ்சியம்

மகாபெரியவர் வந்தார்

Published On 2023-09-25 10:35 GMT   |   Update On 2023-09-25 10:35 GMT
  • “உரு ஏறத் திரு ஏறும்” என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.
  • ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.

1960ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் மாங்காட்டிற்கு விஜயம் செய்தார்.

வேண்டுவார் வேண்டுவதை அருள வல்லதும், ஸ்ரீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான மகா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்தமேரு அங்கு இருந்தும் கூட,

அதை தரிசித்துப் பயன்பெறுவதிலே மக்கள் அவ்வளவாக ஆர்வம் இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களது கருணை உள்ளம் வேதனை அடைந்தது.

தான் வழக்கமாகப் படுத்து உறங்கும் கட்டிலுக்கு அடியிலே ஒரு பெரும் புதையல் இருப்பதை அறியாமல்,

ஒருவன் நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் பிச்சை எடுத்தே வயிறு வளர்த்து வந்தானாம்.

அதே போல், அள்ள அள்ளக் குறையாத ஓர் அளப்பரும் திருவருட் களஞ்சியம் மாங்காட்டிலே இருந்தும்,

அதை அறியாமல் மக்கள் தம் குறைகளைப் போக்கிக் கொள்வதற்காக எங்கெங்கோ அலைந்து ஏங்கித் தவிக்கிறார்களே என்று

ஸ்ரீஅச்சய சாமிகள் இரக்கம் கொண்டார்கள்.

அங்குள்ள பரம்பரை அர்ச்சகராகிய மறைத்திரு ஏகாம்பர சிவாச்சாரியாரிடத்தில் இது பற்றி உரையாடினார்கள்.

காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய சாமிகளின் ஆணையை சிரமேற்கொண்டு, அவர்கள் காட்டிய நெறியே நின்று,

ஆலயத்தினுள்ளே நாள் தோறும் தீவிரமான ஜபயோக சாதனையில் ஈடுபடலானார் ஸ்ரீஏகாம்பர சிவாச்சாரியர்.

அதன் பலனைத்தான் இன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பெருகி வழிகின்ற பக்தர்களின் கூட்டத்திலே நாம் பார்த்து மகிழ்கிறோம்.

"உரு ஏறத் திரு ஏறும்" என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.

அந்த நியதிப்படியே, சிவாச்சார்யரின் ஜபயக்ஞம் ஏறஏற, ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.

கோவில் அதிகாரிகளால் எளிதில் சமாளிக்க முடியாத அளவுக்கு, இன்னமும் பெருகிக் கொண்டே வருகிறது.

Tags:    

Similar News