search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாகத்தை பார்த்தால் யோகம் தெரியும்
    X

    நாகத்தை பார்த்தால் யோகம் தெரியும்

    • வல்லமைப் படைத்த அசுபகிரகமான அங்காரக பகவான் ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அங்காரக தோஷம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது.
    • பொதுவாக நாக தோஷங்களில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்படுவது கால சர்ப்ப யோகதோஷம்.

    நாக தோஷம் என்பது நவக்கிரக கோள்களில் சாயா கிரகங்கள் எனப்படும் ராகு/கேது ஆகியவைகளால் ஏற்படுவதாகும். ராகு கேது ஆகிய இவ்விருவரும் அசுப கிரகங்கள். இவர்கள் சூரியன், செவ்வாய், சனி ஆகிய இயற்கையான அசுப கிரகங்களைக் காட்டிலும் அதிக தீமை பயப்பவர்கள்.

    இவர்களுக்கு பன்னிரண்டு ராசிகளில், தமக்கென உரிய ராசி என்று ஏதும் இல்லையென்றாலும், தாம் சஞ்சரிக்கும் ராசியை தமதாக்கி, அந்தப் பாவத்திற்குரிய நற்பலன்களை நலிவடையச் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் அது மட்டுமல்லாமல் அந்த பாவத்திற்குரிய பொறுப்பையும் ஏற்று செயல்படும் வலிமை பெற்றவர்கள்.

    நவக்கிரகத்துத் தலையாய நாயகர்களாகிய சூரியன் மற்றும் சந்திரன் இவர்களுக்கு எதிரிகளாவதோடு, ஒளிதரும் அவர்களைத் தனது நிழலால் மறைத்து கிரகண தோஷத்தை உண்டாக்கி உலகை இருளடையச் செய்யும் வல்லமைப் பெற்றவர்கள். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் வலமாகச் சுற்றாமல் இடமாக சுற்றுவதோடு, எப்போதும் 7க்கு 7ஆக அமைந்து இயங்குபவர்கள்.

    அதனால் தான் பெரியவர்கள் நாகத்தைப் பார்த்து யோகத்தைச் சொல்ல வேண்டுமென்று குறிப்பிடுவார்கள். இதைப் போல வல்லமைப் படைத்த அசுபகிரகமான அங்காரக பகவான் ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அங்காரக தோஷம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது.

    பொதுவாக நாக தோஷங்களில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்படுவது கால சர்ப்ப யோகதோஷம். ஒருவர் பிறக்கும்போது கணிக்கப்படும் ராசி கட்டத்தில் ராகு-கேது ஆகியவர்களுக்கு இடையே மற்ற 7 கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதையே கடுமையான கால சர்ப்ப யோக தோஷங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

    ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் கீழ்கண்டவாறு ராகு - கேதுக்கள் இருப்பதை கால சர்ப்ப யோக தோஷங்கள் எனப்படும்.

    ராகு, கேது இருக்கும் இடம்

    ராகு 1 7 2 8 3 9 4 10 5 11 6 12

    கேது 7 1 8 2 9 3 10 4 11 5 12 6

    மேற்குறிப்பிட்டபடி ஜாதகம் அமையப் பெற்றவர்கள் வறுமை, துன்பம், வியாதி, தொழில் இழப்பு, பகை, அரக்கசுபாவம், திருமணத்தடை, புத்திர தோஷம் முதலான துன்பங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. எங்கு சென்றால் துன்பங்கள் நீங்கி முக்தி பெற முடியும் என்று வழித் தெரியாமல் பலர் தவிக்கின்றனர். ஜாதகம் கணிக்காவிட்டாலும் மேற்படித் துன்பங்களை பலர் அனுபவித்து வருகின்றனர். இதற்கு ஒரே வழி இறைவனை முறையாக வழிப்பட்டால்தான், துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற முடியும்.

    தினமும் காலையில் சூரியபகவானை வணங்கி, திருஞானசம்மந்தப் பெருமான் அருளிச் செய்த கோளறு பதிகம் 11 பாடல்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம் மற்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் முதலானவற்றை தினமும் பாராயணம் செய்து, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி முதலான புண்ணிய காலங்களில் விரதம் இருந்து ஒன்பது வாரங்கள் பரமேசுவரன் மற்றும் நவக்கிரகங்களை வழிப்படுகிறவர்களுக்கு இறையருளால் பகைவராலோ, கடனாலோ, நோய்களாலோ ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும்.

    Next Story
    ×