search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை கரை சாலை"

    • மதுரை ஆரப்பாளையம் வைகை கரை சாலையில் அன்னதானம் நடத்த எப்படி அனுமதித்தார்கள் என்று பொதுமக்கள் வினா எழுப்பி உள்ளனர்.
    • இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மதுரை

    தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியாக விளங்கும் மதுரை மாநகராட்சியில் மத்திய-மாநில அரசுகள் வழங்கும் நிதி மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1100 கோடி ரூபாய் மதிப்பில் பாலங்கள் அமைத்தல், பஸ் நிலையங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    அதில் மதுரை நகரில் ஓடும் வைகையாற்றின் இருபுறமும் ரூ. 380 கோடியில் நவீன சாலை அமைக்கும் பணியும் ஒன்று. இந்த திட்டத்தில் 80 சதவீத பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளன. அதனால் நகர் பகுதியில் இருந்து 4 வழிச்சாலைக்கு எளிதாக சென்றடையலாம் என நினைத்தது நடக்கவில்லை.

    பழைய குயவர்பாளையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வைகை கரை பகுதிகளிலும் இத்திட்டத்தின் கீழ் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் பேச்சியம்மன் படித்துறை, ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு சாலை பணிகள் முழுமையடைய வில்லை.

    மேற்கண்ட பகுதிகளில் ஒர்க்‌ஷாப்கள் அதிகம் என்பதால் அங்கு பழுதுக்கு வரும் வாகனங்களை இந்த சாலையில் நிறுத்திச் செல்கின்றனர். இதனால் வாகனம் நிறுத்துமிடமாக வைகை கரை சாலை மாறி வருகிறது. மேலும் அந்தப்பகு தியைச் சேர்ந்த சிலர் மாட்டு கொட்டகையாகவும் மாற்றியுள்ளனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.

    இதுபோன்ற இடையூறுக ளால் இந்த திட்டம் முழுமையாக முடியாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கிறது. இந்த சாலை திட்டத்திற்கான நோக்கம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் ஆரப்பாளையம் அருகே உள்ள வைகை தென்கரை சாலையில் அன்னதான பந்தல் போட்ட வினோதம் நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று அன்னதானம் நடைபெற்றது. இதற்காக யாருடைய அனுமதியும் இல்லாமல் பலகோடி மதிப்பில் போடப்பட்ட சாலையை முழுமையாக ஆக்கிரமித்து ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மதுரையில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்பவர்களை பாய்ந்து பிடித்து அபராதம் வசூலிக்கும் போலீசார் சாலை விதிகளை மீறிவிட்டதாக சாதாரண மக்களிடம் ஆயிரக்கணக்கில் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஆனால் சாலையையே ஆக்கிரமித்து அன்னதானம் நடத்த எப்படி அனுமதித்தார்கள் என்று பொதுமக்கள் வினா எழுப்பி உள்ளனர்.

    போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ரூ. 380 கோடியில் போடப்பட்ட வைகை கரை சாலை திட்டம் கேள்விக் குறியாகி உள்ளது.

    இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், நகரில் உள்ள கோவில்களில் திருவிழா நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சி மற்றும் பதவிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைக்கின்றனர். இதனால் விழா நடத்துவோர் விதிகளை மீறலாம் என்ற தொணியில் இஷ்டத்திற்கு சாலைகளை மறித்து மேடை அமைப்பது, மின் கம்பத்தில் மின்சாரம் திருடுவது, சாலைகளை தோண்டி கட்சிக்கொடிகளை நடுவது போன்ற செயல்கள் நடந்து வருகிறது. இத னால் அதிகாரிகளும், போலீசாரும் எதுவும் செய்யமுடியாமல் மவுனம் காத்து வருகின்றனர். யாரும் கேட்காததால் இதுபோன்ற விதிமீறல்கள் மதுரையில் தொடர்ந்து நடந்து வருவது வேதனைக்குரியது என்றனர்.

    சாலையில் பந்தல் அமைக்கப்பட்ட பகுதி மேயர் இந்திராணியின் சொந்த வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    ×