search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பவுடர்"

    திருவான்மியூரில் போதை மாத்திரை மற்றும் பவுடரை விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    திருவான்மியூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை, போதை பவுடர் பயன்படுத்தப்படுவதாகவும், கல்லூரி மாணவர்கள் பலருக்கும் போதை மாத்திரை சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அடையாறு துணை கமி‌ஷனர் சஷாங் சாய் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவான்மியூர் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் உத்தரபிரதேச மாநித்தை சேர்ந்த நிகில் திவாரி என்பதும், சென்னையில் பல்வேறு இடங்களில் போதைபொருள் சப்ளை செய்து வந்ததும் தெரிந்தது.

    அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 5 விதமான போதை மாத்திரை, போதை பவுடர், போதை பேப்பர் உள்ளிட்டவை இருந்தன. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.

    நிகில் திவாரி இவற்றை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வாங்கி சப்ளை செய்துள்ளார். அவர் வைத்திருந்த ஒருவகை போதை பேப்பரை நாக்கில் வைத்தால் போதை அதிகரிக்கும். இதனை பயன்படுத்துபவர்களுக்கு சுமார் 5 மணி நேரம் வரை போதை நீடிக்கும்.

    இதனால் நிகில் திவாரியிடம் போதை மாத்திரைகளை வாங்குவதற்கு தனி கூட்டமே இருந்துள்ளது. அதிக அளவில் கல்லூரி மாணவர்களுக்கு அவர் சப்ளை செய்து இருக்கிறார்.

    போதை பொருட்களை அவர் கடந்த 7 மாதமாக சென்னையில் சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

    அவரிடம் போதை மாத்திரைகளை வாங்கியவர்கள் யார்? வெளிநாட்டில் இருந்து எப்படி வருகிறது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×