search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பரிசு பொருள்"

    • 2017-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.
    • இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் வாங்கவேண்டும் என தமிழக அரசு எடுத்த முடிவு பாராட்டத்தகுந்தது.

    மதுரை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:

    தமிழகத்தில் பொங்கல் திருவிழா அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு எடுத்த முடிவு பாராட்டத் தகுந்தது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை அருகிலுள்ள பிற மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டு உள்ளன.

    கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடைவதில்லை. இதற்கு மாற்றாக, தமிழக அரசின் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பலனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தும் பலன் இல்லை. எனவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என

    கோரியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. நன்மை தருவதும் கூட. இதுதொடர்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்து உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

    அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது சம்பந்தமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மனுதாரர் முன்கூட்டியே யூகத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர், தமிழக வேளாண்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    ×