search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை கலெக்டர்"

    மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? என புதுவை மாவட்ட கலெக்டர் அருண் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் புதுவை மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? என புதுவை மாவட்ட கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் தற்போது நிலவிவரும் வெப்பம் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும் சூழல் உள்ளது. இத்தகைய வெப்ப தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் புதுவை மாவட்ட நிர்வாகம், மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்துகிறது.

    செய்யக்கூடியவைகள்:

    வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வாயிலாக தரப்படும் உள்ளூர் வானிலை முன் அறிவிப்பின் மூலம் வெப்ப தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என தெரிந்துகொள்ளவும்.

    தாகமாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போதிய குடிநீரை அவ்வப்போது பருகவும். எடை குறைந்த, வெளிறிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும். வெளியில் செல்லும்போது பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை பயன்படுத்தவும். வெளியிடங்களில் வேலை செய்யும்போது குடை அல்லது தொப்பி அணியவும். தலை, கழுத்து, முகம், கை, கால்களை ஈரத்துணியினால் மூடிக்கொள்ளவும். புத்துணர்ச்சி தரக்கூடிய உப்புக்கரைசல்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, கஞ்சி, எலுமிச்சைச்சாறு, மோர் உட்கொள்ளவும்.

    வெப்ப வெடிப்பு, வெப்ப தடை பிடிப்புகள் மற்றும் வெப்ப தாக்கத்தினால் ஏற்படும் பலவீனங்கள், மயக்கம், தலைவலி, வாந்தி, வியர்வை போன்ற அறிகுறிகளை அறிந்திருக்கவும். மயக்கம் மற்றும் இதர உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுகவும்.

    கால்நடைகளை நிழலான பகுதிகளில் தங்க வைத்து குடிப்பதற்கு போதிய குடிநீர் வழங்கவும். வீட்டை திரைச்சீலைகள், கொட்டகைகள் பயன்படுத்தி போதிய அளவு குளிர்ந்ததாக வைத்திருக்கவும்.

    மின் விசிறிகள், ஈரத் துணிகளை பயன்படுத்தவும். அடிக்கடி குளிர்ந்த நீரால் குளிக்க வேண்டும். கடினமான வேலைகளை அந்நாளின் வெப்பம் குறைந்த காலை மற்றும் மாலை நேரத்தில் செய்ய வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களின் மேல் தனி கவனம் செலுத்துவது நல்லது.

    செய்யக்கூடாதவைகள்:

    மதியம் 12 மணி முதல் 3 மணிவரை இடைப்பட்ட நேரத்தில் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான மற்றும் கனமான ஆடைகளை அணிய வேண்டாம். நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தின் உள்ளே குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ விட்டுச்செல்ல வேண்டாம்.

    வெயிலின் தாக்கம் அதிகமான நேரங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும். சமையல் வேலைகளை வெயிலின் உச்சமான நேரங்களில் செய்ய வேண்டாம். சமையலறைகள் போதிய காற்றோட்டம் உள்ளதாக அமையும் வகையில் சமையலறை கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.

    மது, தேநீர், காப்பி, கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் போன்ற நீர் குறைப்பிகளை தவிர்க்க வேண்டும். உலர்ந்த, கெட்டியான மற்றும் புரத சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் இந்திய வானிலை ஆய்வுத்துறை வழங்கும் ஆலோசனைகளை தொடர்ந்து கண்காணித்து பாதகமான சூழ்நிலைக்கு ஏற்றவாறு தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பொதுமக்கள் இது தொடர்பான விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1070, 1077 எண்களை பயன்படுத்தலாம். தீயணைப்புத்துறை புகார்களுக்கு 101, மின்துறை புகார்களுக்கு 1912, அவசர கால ஊர்திக்கு 108 என்ற எண்களை பயன்படுத்தவும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×