search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீப் பிரியாணி"

    • திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் 3 உணவகங்கள் உள்ளன.
    • கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க கலெக்டர் அனுமதி அளித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் 3 உணவகங்கள் உள்ளன. இங்கு தயிர் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், பிரிஞ்சி சாப்பாடு, கேழ்வரகு களி உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த உணவகத்தில் மாட்டிறைச்சி உணவும் சேர்க்க வேண்டும் என்று திருவள்ளுர் மாவட்ட முன்னாள் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மோகன் என்பவர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் மனு அளித்திருந்தார். அத்தகைய மனுவை கலெக்டர் முதலில் நிராகரித்திருந்தார். இதனை எதிர்த்து மோகன், தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் முறையிட்டார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் உணவ கத்தில் மாட்டு இறைச்சி போன்ற அசைவ உணவுகளும் சேர்க்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 3 உணவகத்திலும் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை சேர்க்க கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனுமதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.100 ஆகும். இதேபோல் அசைவ உணவுக்கான விலைப் பட்டியலும் உணவு விடுதி முன்பாக பேனராக வைத்து உள்ளனர். அதில் சிக்கன் பிரியாணி ரூ.100, சிக்கன் குழம்பு-ரூ.50, முட்டை-ரூ.15, சிக்கன்65-ரூ.60, மீன் குழம்பு -ரூ.50, மீன் வறுவல்-ரூ.30, மட்டன் குழம்பு-ரூ.100, ஆட்டுக்கால் சூப்-ரூ.100, மட்டன் பிரியாணி-ரூ.200, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் மாட்டிறைச்சி உணவு சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×