search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியின பெண் டாக்டர் தற்கொலை"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்வயது பழங்குடியினப் பெண் டாக்டரை சாதி வன்கொடுமைக்கு உட்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கைதான 3 பெண் டாக்டர்களுக்கு ஜூன் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள பி.ஒய்.எல். நாயர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் பாயல் டாட்வி(26). பழங்குடியினத்தை சேர்ந்த இவரை சாதியின் பேரால் இங்கு உடன் பணியாற்றும் சில டாக்டர்கள் தொடர்ந்து அவமானகரமாக இழிவுப்படுத்தி பேசியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளனர்.

    ஒருகட்டத்தில் சக டாக்டர்களின் கொடுமைகளையும் இழிச்சொற்களையும் சகித்துக்கொள்ள முடியாத பாயல் டாட்வி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆஸ்டல் அறையில் கடந்த 22-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூன்று பெண் டாக்டர்களும் சேர்ந்து தனது மனைவியை கொன்று விட்டதாக பாயல் டாட்வியின் கணவர் சல்மான் குற்றம்சாட்டியிருந்தார். 

    அவரது மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உற்றார், உறவினர்களும் பழங்குடியின மக்கள் நலச்சங்கத்தினரும் வலியுறுத்தி வந்தனர். 

    இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து 8 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

    பாயல் டாட்வியின் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் சிலரிடம் விசாரணை நடத்திய அக்ரிப்பாடா போலீசார், டாக்டர் பக்தி மெஹேரே என்பவரை 28-ம் தேதி கைது செய்தனர்.

    இவ்விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்படும் மேலும் இரு டாக்டர்களான அன்க்கிட்டா கன்டேல்வால்,  ஹேமா அஹுஜா ஆகியோர் கைது நடவடிக்கைக்கு பயந்து மும்பை கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    எனினும், அவர்களது முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக மும்பை போலீசார் அன்க்கிட்டா கன்டேல்வால்,  ஹேமா அஹுஜா ஆகியோரை 29-ம் தேதி கைது செய்தனர். கைதான மூன்று டாக்டர்கள் மீதும் சாதி வன்கொடுமை தடுப்பு சட்டம், ‘ரேகிங்’ தடை சட்டம், தற்கொலைக்கு தூண்டிய சட்டப்பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 டாக்டர்களையும் 31ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார். இன்று அவர்கள் மூவரும் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 10-ம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
    ×