search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றிகாய்ச்சல்"

    • ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • நோய் மனிதா்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை.

    ஊட்டி:

    தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய 3 சரணாலயங்கள் ஒன்றிணைந்த தொடா் வனப்பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முதுமலை வனப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாள்களாக முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் அடுத்தடுத்து காட்டு பன்றிகள் தொடா்ந்து உயிரிழந்து வந்தன.

    இந்தக் காட்டு பன்றிகளை, தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவக் குழுவினா், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு மருத்துவக் குழுவினா் ஆகியோா் உடற்கூறு ஆய்வு செய்து முக்கியமான உறுப்புகளை சென்னை மற்றும் டெல்லிக்கு ஆய்வுக்கு அனுப்பினா். இதில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் நிருபா்களிடம் கூறியதாவது:-

    ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் மனிதா்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை.

    தமிழகம், கேரளம், கா்நாடக மாநில அரசுகளின் கலெக்டர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் நாளை(இன்று) காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்துக்கு பின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கூடலூா் வனத்துறை அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், காட்டுப் பன்றிகள் இறப்புச் சம்பவங்கள் குறித்து நிலைமை சீரடையும் வரை, நீலகிரியில் வளா்ப்பு பன்றிகளை விற்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கண்ணூர் மாவட்டம் கேணிச்சார் ஊராட்சிக்குட்பட்ட பன்றி பண்ணையில் பாதிப்பு.
    • கேரள அரசு தமிழகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கேரளாவின் வயநாடு பகுதியில் ஆப்பிரிக்கன் பன்றிகாய்ச்சல் கண்டறியப்பட்டது. இதையடுத்து வயநாடு பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில் இருந்த 300க்கும் மேற்பட்ட பன்றிகள் அழிக்கப்பட்டன.

    கண்ணூர் மாவட்டம் கேணிச்சார் ஊராட்சிக்குட்பட்ட பன்றி பண்ணையில் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் 14 பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்த நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் 200க்கும் மேற்பட்ட பன்றிகளை அழிக்க உத்தரவிட்டது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கேரள அரசு தமிழகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கேரள அரசு தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை கொண்டு வர தற்காலிக தடை விதித்துள்ளது.

    கேரளாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் ஆப்பிரிக்கன் பன்றிகாய்ச்சலை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர், போளூவாம்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட 19 இடங்களில் பன்றி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் நேரடியாக சென்று ஆப்பிரிக்கன் பன்றிகாய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கையாக பன்றிகளின் எச்சங்கள், கழிவுகள் உள்ளிட்ட மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. பண்ணை உரிமையாளர்களுக்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

    இதுகுறித்து கோவை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:-

    ஆப்பிரிக்கன் பன்றிகாய்ச்சல் என்பது பன்றிகளுக்கு மட்டுமே பரவும். பன்றிகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவாது. இதற்கு என தனியாக தடுப்பூசி மற்றும் சிகிச்சை இல்லை. காய்ச்சல் பாதிக்கப்படும் பன்றிகள் உயிரிழக்க நேரிடும்.

    பாதிக்கப்படும் பன்றிகளுக்கு அதிக காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை இருக்கும். கண்கள் மூடிவிடும். கருசிதைவு ஏற்படும். குறைபிரசவத்தில் குட்டிகள் பிறக்கும்.

    கேரளாவில் வேகமாக பரவி வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள 19 பன்றி பண்ணைகளில் ஆய்வு செய்யப்பட்டது. பன்றிகளிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பன்றிகள் திடீர் இறப்பு இருந்தால் தகவல் அளிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பண்ணையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வெளியாட்களை பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ப உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.தொடர்ந்து பன்றி பண்ணைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×