search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமைத் தாயகம்"

    • பசுமைத் தாயகம் சார்பில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
    • நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளை வனத்துறையிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியினரால் மறக்க முடியாத நாள்களில் பசுமைத் தாயகம் நாள் முதன்மையானது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25-ஆம் நாள் தான் பசுமைத்தாயகம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் காக்கவும், ஏரிகள், உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்தவும் பசுமைத்தாயகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஏராளம்.

    பசுமைத்தாயகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் நான் மிகவும் விரும்புவது சுற்றுச்சூழலைக் காப்பதற்காக மரக்கன்றுகளை நடுவதைத் தான். பசுமைத் தாயகம் சார்பில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

    உலகம் முழுவதும் புவி வெப்பயமாதலின் தீய விளைவுகள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பசுமைத் தாயகம் நாளை நடப்பாண்டில் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடப்பட்டதை விட இந்த ஆண்டில் இன்னும் அதிக மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பது தான் எனது ஆசையாகும்.

    தமிழ்நாடு முழுவதும் குறைந்தது 2 லட்சம் மரக்கன்றுகளாவது நடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    மொத்தம் 443 நாட்களில் 3283 பேர் தங்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்காக 28 ஆயிரத்து 6 மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். அவர்கள் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னை மகிழ்வித்து வருகின்றனர்.

    பசுமைத் தாயகம் நாளுக்கு இன்னும் 78 நாட்கள் உள்ளன. பா.ம.க.வினர் 10 பேர் இணைந்து ஒரு மரக்கன்று நட்டு வளர்த்தாலும் கூட ஒரு வாரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு விட முடியும். ஆனால், அவை எங்கு நடப்படும், எவ்வாறு நடப்படும், எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? என்பதற்கு எந்தவகையான உறுதியும் கிடையாது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் அடுத்த பத்தாண்டுகளில் அவற்றுக்குரிய பயனை வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் தான் நடப்பாண்டில் மரக்கன்று நடுவதற்கான இலக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மரக்கன்றுகளை நடும் பணிகளை பசுமைத்தாயகம் அமைப்பு ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஒன்றியம், நகரம், பேரூர், சிற்றூர்களில் எவ்வளவு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பதும், ஒவ்வொரு ஊரிலும் அவை எங்கெங்கு நடப்பட வேண்டும் என்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட வேண்டும். மரக்கன்றுகள் நடப்பட்ட பிறகு அவற்றை யார், யார் பராமரிப்பது என்பதும் தீர்மானிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் அமர்த்தப்பட வேண்டும்.

    நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, அவற்றின் வகைகள், நடப்பட்ட ஊர்கள், அவற்றை பராமரிப்பவர்களின் பெயர், விவரம், முகவரி ஆகியவை பதிவு செய்து மாவட்ட வாரியாக ஆவணம் ஆக்கப்பட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    பசுமைத்தாயகம் நாளில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளை வனத்துறையிடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதற்கு வாய்ப்பில்லாத இடங்களில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

    எனவே, பசுமைத்தாயகம் நாளில் மண்ணுக்கு மரக்கன்றுகளை பரிசளிப்ப தற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கும்படி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×