search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி ஊழியர்"

    • நாமக்கல்லில் ஒரு தனியார் ஓட்டலில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடந்தது.
    • முன்பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் 40 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு போட்டி நடந்தது.

    நாமக்கல்:

    'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடிகர் சூரி பரோட்டா சாப்பிடும் போட்டியில் பரோட்டாக்களை கணக்கில்லாமல் சாப்பிடும் காமெடி காட்சி இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது. பொதுவாக கிராமங்களில் விழாக்களின்போது ஆண், பெண்களுக்கு என பல்வேறு போட்டிகள் நடத்துவது வழக்கம். அதில் உணவு சாப்பிடும் போட்டிகளும் இடம்பெறுவது உண்டு. சிலர் சாப்பாட்டில் வல்லவர்களாக உணவை வெளுத்துக்கட்டி பரிசினை வெல்வார்கள்.

    சில இடங்களில் நூதன சாப்பாட்டு போட்டிகள் நடைபெறுவது உண்டு. நாமக்கல்லில் ஒரு தனியார் ஓட்டலில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடந்தது. இதில் முன்பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் 40 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேற்று மதியம் போட்டி நடந்தது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது.

    போட்டி தொடங்கியதும் அனைவரும் வேகமாக பிரியாணி சாப்பிட்டனர். ஸ்வீட், 2 முட்டை, லெக் பீஸ் உடன் பிரியாணி பரிமாறப்பட்டது. 20 நிமிடத்தில் யார் அதிகளவு பிரியாணி சாப்பிட்டார்களோ அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர்.

    இதில் நாமக்கல்லை சேர்ந்த சரவணன் (23) அதிக அளவாக 2.650 கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் இடத்தை பிடித்தார். 2.350 கிலோ சாப்பிட்ட ஜீவா 2-வது இடத்தையும், 2.300 கிலோ சாப்பிட்டவர் 3-வது இடத்தையும் பிடித்ததாக பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்றவர் நாமக்கல் நகராட்சி தற்காலிக ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல், திருச்சி ரோட்டில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • நகராட்சி ஆணையாளர் சுதா துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து காவல் நிலையம் முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தார்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர் உள்பட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கும் காவல் துறை சார்பில் கூடுதலாக அபராத கட்டணம் விதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாமக்கல், திருச்சி ரோட்டில் நேற்று போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வந்த நாமக்கல் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கந்தசாமிக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தனர் .

    இதனால் கந்தசாமி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நகராட்சி பணியாளரான என்மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என கூறினார். ஆனால் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை. அரசு விதிப்படி அபராதம் கட்டியே ஆக வேண்டும் என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணி மேற்பார்வையாளர் கந்தசாமி நாமக்கல் போலீஸ் நிலையம் முன்பு நகராட்சி பேட்டரி வாகனத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விட்டு சென்றார் .

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவம் குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே நகராட்சி ஆணையாளர் சுதா துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து காவல் நிலையம் முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தார்.

    இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார். அவரை அழைத்து விளக்கம் கேட்டதுடன் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்தார்.

    ×