search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் வழி பிரிவு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது.
    • அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    வரும் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது.

    வரும் கல்வி ஆண்டு முதல் தற்காலிக நீக்கம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் இந்த கல்வி ஆண்டு எந்த பாடப்பிரிவும் நீக்கப்படாது.

    அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ் வழியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது.
    • வகுப்புகளை காலியாக வைத்துக்கொண்டு பாடம் நடத்துவதால் நிதி வீணாகும்.

    சென்னை:

    மருத்துவ படிப்புக்கான 'நீட்' உள்ளிட்ட தகுதி தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளிலும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது.

    ஆனால் தற்போது தமிழ் வழியில் வழங்கப்படும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் அந்த கல்லூரிகளில் தமிழ் வழி பிரிவு பாடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது.

    முந்தைய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த காரணத்தாலும், 2023-24 ஆம் கல்வி ஆண்டுகளில் 11 கல்லூரிகளில் தமிழ் வழியில் வழங்கப்படும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இளங்கலை பொறியியல் படிப்புகளை நிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

    மேலும் ஆங்கில வழியில் வழங்கப்படும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால் இந்த ஆண்டு 4 கல்லூரிகளில் தமிழ் வழி பிரிவு நிறுத்தப்படுகிறது.

    குறிப்பாக திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி, ஆரணி, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் பி.இ. மெக்கானிக்கல் மற்றும் பி.இ. சிவில் படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோன்று திருக்குவளை பகுதியில் உள்ள ஆங்கில வழி பி.இ. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பும், அரியலூர், பட்டுக்கோட்டையில் சிவில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த முடிவு தொடர்பான சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மையம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி உள்ளது. பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை 2-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட 11 கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் சிவில் என்ஜினீயரிங் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்புகளில் தமிழ் வழி பிரிவில் 10-க்கும் குறைவான மாணவர்களே இருந்ததாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    ஆங்கில வழியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் வளாகத்தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற்று தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்று விடுகிறார்கள். ஆனால் தமிழ் வழியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பெறுவதில் சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கிறது.

    இதுபோன்ற காரணங்களால் தமிழ் வழியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது. அதேபோன்று ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாததால் அங்கும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. ஆகவேதான் இந்த அதிரடி நடவடிக்கையில் அண்ணா பல்கலைக்கழகம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    வகுப்புகளை காலியாக வைத்துக்கொண்டு பாடம் நடத்துவதால் நிதி வீணாகும். எனவே அந்த வகுப்பறைகளுக்கு புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகப்படுத்துவது நல்லது என்ற முடிவை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    குறைவான மாணவர் சேர்க்கை இருக்கும் கல்லூரிகளில் தற்காலிகமாக அந்த படிப்புகளை இடைநிறுத்துவதற்கான பல்கலைக்கழகத்தின் திட்டம் குறித்து முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் 13 உறுப்பு கல்லூரிகளை கொண்டுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளில் இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் கடந்த கால பெருமையை இழந்துள்ளன. ஒரு சில கல்லூரிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 26 முதல் 22 சதவீத இடங்களை மட்டுமே அந்த கல்லூரிகளால் நிரப்ப முடிந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ×