search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்கள் பணி"

    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்ததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். #DoctorsStrike

    திண்டுக்கல்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு டாக்டர்கள், புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்தனர்.

    இது குறித்து திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    எங்கள் கோரிக்கையை அரசுக்கு பலமுறை எடுத்துகூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் செவிசாய்க்க வில்லை. இதனால் திறனாய்வு கூட்டங்களை புறக்கணிப்பது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை நிறுத்தியது, சிறப்பு முகாம்களை ரத்து செய்தது போன்ற பல்வேறு மக்கள் நேரடி பாதிப்பு இல்லாத போராட்டங்களில் அரசு டாக்டர்கள் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை.

    எனவே இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 250 டாக்டர்கள் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதன்பிறகும் அரசு அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது, முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தையும், மருத்துவ மாணவ வகுப்புகளையும் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும் 8-ந் தேதி முதல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ராஜினாமா கடிதங்களை பெறுவது, 10-ந் தேதி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், 12-ந் தேதி நோயாளிகளின் சிகிச்சைகளை நிறுத்துவது, 13-ந் தேதி அடையாள வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம். அப்போதும் தீர்வு கிடைக்க வில்லை எனில் வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

    அரசு ஆஸ்பத்திரியில் தற்போது மழைக்கால நோய்கள் தாக்கப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். இதுபோன்ற சமயத்தில் அரசு டாக்டர்களின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பயிற்சி டாக்டர்களை கொண்டு புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் அரசு ஆஸ்பத்திரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். #DoctorsStrike

    ×