search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி ஏற்றுமதி"

    • பஞ்சு விலை உயர்வு காரணமாக கடந்த நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    • இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவுநிலையில் இருந்து மீண்டு வருகிறது.

    திருப்பூர் :

    பஞ்சு விலை உயர்வு காரணமாக கடந்த நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. கடைசி 3 மாதங்களில் மேற்கொண்ட தீவிர முயற்சியால் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலையை எட்டியது.

    அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இதனால் இந்த நிதியாண்டின்(2023-24) துவக்கமும் சவால் நிறைந்ததாக உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12, 002 கோடி ரூபாயாக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 9,929 கோடியாகவும்,கடந்த ஆண்டு மே மாதம் 10, 942 கோடி ரூபாயாக இருந்த வர்த்தகம் கடந்த மே மாதம் 10, 126 கோடியாகவும் குறைந்துள்ளது.

    அதேசமயம் கொரோனாவுக்கு பிறகு 2021 - 22ல், 8,108 கோடிக்கு நடந்திருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தற்போது 10 ஆயிரத்து 176 கோடியாக உயர்ந்துள்ளதே வளர்ச்சிதான். நிதியாண்டின் துவக்கத்தில் 17.19 சதவீதமாக இருந்த சரிவுநிலை 7 சதவீதமாக குறைந்துள்ளது என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், அமெரிக்காவில், பொருளாதார மந்தநிலை குறைந்துவிட்டது.எரிபொருள் விலை உயர்வு சீராகி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவுநிலையில் இருந்து மீண்டு வருகிறது. இம்மாதமும், வர்த்தகம் சற்று உயரும். ஜூலை மாதத்தில் இருந்து மீண்டும் பழைய நிலை திரும்பும். அதற்கு பிறகு ஏற்றுமதி நிறுவனங்கள் பழைய வேகத்தில் இயங்க துவங்கும் என்றார்.

    • கடந்த ஆண்டில் உள்நாட்டில் நிலவிய உச்சபட்ச விலை உயர்வால் பருத்தி இறக்குமதி 176 சதவீதம் அதிகரித்தது.
    • பருத்தி, பஞ்சு, நூலிழை போன்றவற்றை, இத்தகைய நாடுகள் நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய துவங்கி விடுகின்றன.

    திருப்பூர்:

    நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி, பஞ்சு, பருத்தி நூலிழை மற்றும் ஆடைகளுக்கு, சர்வதேச சந்தைகளில் வரவேற்பு அதிகம். சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகள் தரமான பருத்தி உற்பத்தியில் இந்தியாவை வெற்றி கொள்ள முடியவில்லை.

    பருத்தி சீசன் துவங்கியதும், பருத்தி, பஞ்சு, நூலிழை போன்றவற்றை, இத்தகைய நாடுகள் நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய துவங்கி விடுகின்றன.கடந்தாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் பின்னலாடை தொழில் உட்பட, ஜவுளித் தொழில்துறையினர் அதிக விலை கொடுத்து பஞ்சை வாங்கினர்.

    முந்தைய நிதியாண்டில்(2021-22) 15 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்த பருத்தி நூலிழை துணி, ஜவுளி பொருள் இறக்குமதி கடந்த நிதியாண்டில்(2022-23) 21 ஆயிரத்து 11 கோடி ரூபாயாக அதிகரித்தது. முந்தைய ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாக நடந்த பருத்தி , கழிவு பஞ்சு இறக்குமதி கடந்த நிதியாண்டில் 11 ஆயிரத்து 505 கோடியாக அதிகரித்தது.

    கடந்த ஆண்டில் உள்நாட்டில் நிலவிய உச்சபட்ச விலை உயர்வால் பருத்தி இறக்குமதி 176 சதவீதம் அதிகரித்தது. உள்நாட்டு தேவைக்கான பஞ்சு தடையின்றி கிடைக்கும் வகையில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதன் மூலம், நடப்பு நிதியாண்டில் இறக்குமதியை குறைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்த முடியும் என்கின்றனர் திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையினர்.

    ×