search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஞ்சி வாரச்சந்தை"

    • வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
    • செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி, ஆடு, மாடு சந்தை கூடுவது வழக்கம்.

    இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று வார சந்தையில் ஆட்டு சந்தை கூடியது. அதிகாலை 2 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர்.

    மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர்.

    வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் இங்கு வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 9 ஆயிரம் முதல் 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. வாரச்சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். விலை சற்று கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். அளவுக்கு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் விலையும் சிறிது அதிகமாக இருந்ததாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×