search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்ரி"

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்தை எதிர்க்கும் வழக்கை விசாரிப்பதில் இருந்து தலைமை நீதிபதியைத் தொடர்ந்து, நீதிபதி சிக்ரியும் விலகினார். #SupremeCourt #JusticeSikri
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனராக இருந்து வந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகித்து வந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போரில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரையும் இரவோடு இரவாக கட்டாய விடுப்பில் அனுப்பி விட்டு, இடைக் கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவின் நியமனத்தை ரத்து செய்து கடந்த 8-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூடி, அலோக் வர்மாவை சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுத்தது.

    அதைத் தொடர்ந்து புதிய இயக் குனர் நியமிக்கப்படும் வரையில் நாகேஸ்வரராவை இடைக் கால இயக்குனராக நியமித்து 10-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு வழக்கு தொடுத்தது.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 21-ந் தேதி விலகினார். சி.பி.ஐ.யின் புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். மேலும், சுப்ரீம் கோர்ட்டில் 2-வது இடத்தில் உள்ள நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமயிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

    இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவேயிடம் நீதிபதி ஏ.கே.சிக்ரி, “நீங்கள் என் நிலையை அறிவீர்கள். நான் இந்த வழக்கை விசாரிக்க முடியாது” என கூறினார்.

    மேலும், “இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நான் விலகுவதால் வேறு எதுவும் கூற முடியாது” என குறிப்பிட்டார்.

    இந்த வழக்கு இனி வேறொரு நீதிபதியின் அமர்வு முன் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும்.

    சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்குவதற்கு முடிவு எடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகார குழுவில் நீதிபதி சிக்ரி இடம் பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
    ×