search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Justice Sikri"

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்தை எதிர்க்கும் வழக்கை விசாரிப்பதில் இருந்து தலைமை நீதிபதியைத் தொடர்ந்து, நீதிபதி சிக்ரியும் விலகினார். #SupremeCourt #JusticeSikri
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனராக இருந்து வந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகித்து வந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போரில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரையும் இரவோடு இரவாக கட்டாய விடுப்பில் அனுப்பி விட்டு, இடைக் கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவின் நியமனத்தை ரத்து செய்து கடந்த 8-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

    அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூடி, அலோக் வர்மாவை சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுத்தது.

    அதைத் தொடர்ந்து புதிய இயக் குனர் நியமிக்கப்படும் வரையில் நாகேஸ்வரராவை இடைக் கால இயக்குனராக நியமித்து 10-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு வழக்கு தொடுத்தது.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 21-ந் தேதி விலகினார். சி.பி.ஐ.யின் புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். மேலும், சுப்ரீம் கோர்ட்டில் 2-வது இடத்தில் உள்ள நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமயிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

    இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவேயிடம் நீதிபதி ஏ.கே.சிக்ரி, “நீங்கள் என் நிலையை அறிவீர்கள். நான் இந்த வழக்கை விசாரிக்க முடியாது” என கூறினார்.

    மேலும், “இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நான் விலகுவதால் வேறு எதுவும் கூற முடியாது” என குறிப்பிட்டார்.

    இந்த வழக்கு இனி வேறொரு நீதிபதியின் அமர்வு முன் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும்.

    சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்குவதற்கு முடிவு எடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகார குழுவில் நீதிபதி சிக்ரி இடம் பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஏ.கே. சிக்ரியும் விலகியுள்ளார். #JusticeSikri #CBI
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக்வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும் அலோக்வர்மா குறித்து இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர்நிலை குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது.

    அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் கடந்த 11-ந்தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார்.

    அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த வழக்கு கடந்த 21-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீரென விலகினார்.


    புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இடம் பெற்று இருப்பதால் இந்த வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது என்று கூறி அதில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்தார்.

    இந்த வழக்கை நீதிபதி சிக்ரி தலைமையிலான வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஏ.கே. சிக்ரியும் விலகியுள்ளார். ஏற்கனவே தலைமை நீதிபதி விலகி இருந்த நிலையில் மற்றொரு நீதிபதியும் விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து வேறு ஒரு அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சி.பி.ஐ. புதிய இயக்குனரை இன்று மாலை தேர்வு செய்கிறது. இதற்கான இறுதிப்பட்டியலில் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். #JusticeSikri #CBI
    ×