search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய ஆலைகள்"

    • உற்பத்தி செலவை குறைக்கவும் அடுத்தகட்ட முயற்சியாக பாலியஸ்டர் துணிக்கு சாயமிடவும் ஆயத்தமாகி வருகின்றனர்.
    • நொடிக்கு 6 மீட்டர் தூரம் பிரின்ட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூர் சாய ஆலைகள் அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகியுள்ளன. மின் கட்டண உயர்வு உட்பட பல காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவை குறைக்கவும் அடுத்தகட்ட முயற்சியாக பாலியஸ்டர் துணிக்கு சாயமிடவும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் 28 பேர் அடங்கிய குழு குஜராத் சென்று திரும்பியுள்ளது. சூரத் மற்றும் அகமதாபாத் சென்று ஓவன் துணிகளுக்கான சாயம் மற்றும் பிரின்டிங் ஆலைகளை பார்வையிட்டதோடு தொழில் அமைப்பினரை சந்தித்து திரும்பினர்.

    அகமதாபாத் சாய ஆலை கழிவுகள் முதல்கட்ட சுத்திகரிப்பு மட்டும் செய்யப்படுகிறது. உப்புத்தன்மையுள்ள கழிவு கடலில் நேரடியாக கலக்கப்படுகிறது. அங்கு ஜெனரேட்டர் தேவையே இல்லை. ஒரு நாள் மின்தடை நீங்கலாக மற்ற நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறையின்றி ஆலைகள் இயங்குகின்றன. மின் தடை ஏற்பட்டால் 140 டிகிரி வெப்பத்தில் இருக்கும் துணி கருகிவிடும்.தடையில்லா மின்சாரம் இருந்தால் பல சிக்கல்களை தீர்க்கிறது என்கின்றனர் சாய ஆலை உரிமையாளர்கள்.

    பிரின்டிங் தொழிற்சாலைகளில் அதிநவீன மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக டிஜிட்டல் பிரின்டிங் மெஷினில் குறைந்தது 10 மீட்டர் முதல் சாயமிடும் வசதி உள்ளது. அதாவது நொடிக்கு 6 மீட்டர் தூரம் பிரின்ட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

    அகமதாபாத் நகரில் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற ரஞ்சன் சர்மா என்பவர் உப்பில்லாமல் சாயமிடும் நானோ தொழில்நுட்பத்தில் சாயமிட்டு வெற்றி கண்டுள்ளார். துணியுடன் சிறிது ரசாயனம் கலந்து சாயமிட்டாலே போதும், உப்பு தேவையில்லை.

    பாலியஸ்டர் துணிக்கு குளிர்ந்த நீரிலேயே சாயமிடுவதும் வெற்றி அடைந்துள்ளது. பாலியஸ்டர் துணிக்கு 130 டிகிரி வெப்பத்தில் சாயமிட வேண்டும். ஆனால் அகமதாபாத்தில் குளிர்ந்த நீரிலேயே சாயமிடுகின்றனர்.சாயமிட்ட துணிகளை ஒரு மணி நேரம் சுடு நீரில் நனைத்து வைத்தாலும் சாயம் பிரியாது. இது 100 சதவீதம் பாலியஸ்டர் துணி சாயமிட ஏற்றது.

    சூரத், அகமதாபாத் சென்று தொழில்நுட்ப பகிர்வு செய்து கொள்வதன் மூலம் திருப்பூர் சாயத்தொழில், நிச்சயம் அடுத்தகட்டத்துக்கு நகரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாதேஸ்வரன் கூறுகையில், அகமதாபாத்தில் பார்த்து வந்தபடி உப்பில்லா நானோ தொழில்நுட்பத்தில், சாயமிட முடிவு செய்துள்ளோம். அதற்காக முறையான அனுமதியுடன் சோதனை முறையில் நானோ தொழில்நுட்பத்தில் உப்பில்லாமல் சாயமிட தீர்மானித்துள்ளோம். விரைவில் சங்க உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

    திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-

    சூரத் பகுதியில் பார்த்த ஸ்டீம் ஹவுஸ் தொழில்நுட்பம் வரவேற்புக்குரியது. அகமதாபாத்தில் குளிர்ந்த நீரில் பாலியஸ்டர் துணிகளுக்கு சாயமிடும் தொழில்நுட்பமும், நானோ தொழில்நுட்பமும் திருப்பூரின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும். முதல்கட்ட சுத்திகரிப்புக்கு பின் உப்பு தண்ணீரை கடலில் கலப்பதால் செலவு குறைவாக இருக்கிறது. அதற்கு பதிலாக திருப்பூரில் உப்பில்லா சாயமிடும் தொழில்நுட்பமும் ஸ்டீம் இல்லாமல், பாலியஸ்டர் துணிக்கு சாயமிடும் தொழில்நுட்பமும் பின்பற்றப்படும். 4 நாள் பயணமாக சென்று வந்தது.

    திருப்பூர் சாயத்தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் அம்சங்களுடன் இருந்தது.இவ்வாறு அவர் கூறினார். 

    • சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் புளூசைன் தரச்சான்று அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் என்றார்.
    • வர்த்தகம் என்ற நிலையை தாண்டி, நீடித்த நிலையான இயற்கைசார் உற்பத்திக்கு மாற வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி அடல் இன்குபேஷன் மையம், சுவிட்சர்லாந்து புளூசைன் சிஸ்டம் நிறுவனம் சார்பில் நீடித்த நிலையான இயற்கைசார் ஜவுளி உற்பத்தி குறித்த கருத்தரங்கு நடந்தது. திருமுருகன்பூண்டி தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.

    அடல் இன்குபேஷன் மைய முதன்மை செயல் அலுவலர் பெரியசாமி பேசுகையில், சர்வதேச சந்தைகளில் காலூன்றிய வர்த்தகர்கள், ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் இயற்கை சார் உற்பத்தியில் உருவானதாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். குறிப்பாக வளம் குன்றா வளர்ச்சி மறுசுழற்சி தொழில்நுட்பத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

    தொழிற்சாலைகளில், கார்பன் உற்பத்தியாகும் அளவுக்கு அவற்றை உறிஞ்சும் இயற்கை சார் உற்பத்தி தொழில்நுட்பம் பின்பற்ற வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் புளூசைன் தரச்சான்று அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் என்றார்.

    திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் பேசுகையில், திருப்பூரில் உள்ள பிரின்டிங் நிறுவனங்களுக்கு தரச்சான்று பெற பல்வேறு இடங்களில் விண்ணப்பிக்கிறோம். குறிப்பாக மாறுபட்ட 5 இடங்களில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. ஒரே தரச்சான்று பெற்றால் போதும் என்ற நிலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் எதிர்பார்க்கும்படி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    சுவிட்சர்லாந்து புளூசைன் சிஸ்டம் நிறுவன அதிகாரி கத்திரினாள் மேயர் பேசுகையில், ஜவுளி உற்பத்தியில், பல்வேறு பிரிவில் ரசாயணம் பயன்படுத்தப்படுகிறது.அதிலும் இயற்கையான சாயம் பயன்படுத்தப்பட வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு கருதி நீடித்த நிலையான ஜவுளித்தரம் பராமரிக்க வேண்டும்.

    இந்தியா சர்வதேச நாடுகளுக்கான சந்தையாக இருக்கிறது. வர்த்தகம் என்ற நிலையை தாண்டி, நீடித்த நிலையான இயற்கைசார் உற்பத்திக்கு மாற வேண்டும்.பிரின்டிங் மற்றும் சாய ஆலைகள் தரச்சான்று பெறுவதன் மூலம் உலக அளவில் வர்த்தக வாய்ப்புகளை பெறலாம் என்றார்.

    திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சாய விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். சாயம் மற்றும் பிரின்டிங் நிறுவனங்கள் தரச்சான்று பெறுவதன் மூலமாக நீடித்த நிலையான இயற்கை சார் ஜவுளி உற்பத்தி எளிதாகுமென கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது. 

    ×