search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்பட்டி அரசு மருத்துவமனை"

    தொழிலாளிக்கு ரத்தநாள மாற்று நவீன அறுவை சிகிச்சை செய்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இளம்புவனத்தை சேர்ந்த மாயக்கண்ணன் (வயது 30). கூலித்தொழிலாளியான இவர் கடந்த மாதம் 8-ந் தேதி ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இளம்புவனம் விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாயக்கண்ணனின் வலது கால் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சைக்காக நிபுணர் மருத்துவர் பிரபாகர் சிகிச்சை அளித்து வந்தார்.

    அவருக்கு ப்ரீ பிளாப் முறையில் மைக்ரோ வேஸ்குலர் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. இதில் பாதிக்கப்பட்ட மாயக்கண்ணனின் தொடைப் பகுதியில் இருந்து சதை எடுத்து, அதனை கால் பாதத்தில் வைத்து, அதிலுள்ள ரத்த குழாய்கள் இணைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதா எனவும் சோதனை நடத்தினர்.

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து மருத்துவர் பிரபாகர், மயக்கவியல் மருத்துவர் இளங்கோ, மருத்துவர்கள் பிரபா, ராமலட்சுமி, சரவணன் ஆகியோரை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன் பாராட்டினர். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் செய்தால் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து டாக்டர் பிரபாகர் கூறுகையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த குழாய் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இந்த வகையான அறுவை சிகிச்சை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கூட செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த ப்ரீ பிளாப் மைக்ரோ வேஸ்குலர் அறுவை சிகிச்சை ஒரு மி.மீட்டருக்கு குறைவாக உள்ள ரத்த குழாய்களை இணைக்கும் அறுவை சிகிச்சையாகும்.

    இதில் உள்ள நன்மை, பெரிய அளவில் விபத்தில் காயம் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக ஒரு சதையை மூடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், அதற்குள் உள்ள ரத்த குழாய்கள், எலும்புகள் சேதமடையாமல் பாதுகாக்க முடியும். அது இந்த அறுவை சிகிச்சையால் மட்டுமே முடியும். இந்த அறுவை சிகிச்சை செய்ய 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தேவைப்படும். அதிக நேரம் தேவைப்படும் என்பதால், யாரும் இதனை எடுத்து செய்வதில்லை. நாங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறை வேற்றி உள்ளோம், என்றார்.#tamilnews
    ×