search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்"

    கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற 11-ந்தேதி நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #CooperativeSocietiesElection

    சென்னை:

    தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கூட்டுறவு தேர்தலின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.தொடக்கச் சங்கங்கள், மத்திய சங்கங்கள் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்தது.

    முதல் அடுக்கில் வரும் 18,465 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதல்கட்டத்தில் 12.03.2018 முதல் 7.05.2018 வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் 4 நிலைகளிலும் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உள்ளது உள்ளபடியே நிறுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் 9.04.2018 நாளிட்ட ஆணைக்கிணங்க அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

    இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்ததின் பேரில் உச்ச நீதிமன்றம் மதுரை அமர்வின் அறிவித்தல் தவிர்த்த இதர அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நடத்திட ஆணை பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் ஆணையம் மீண்டும் தொடர்ந்து நடத்தியது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் மட்டும் அறிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திரும்ப அனுப்பியது.

    நிறுத்தப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் ஆகியவற்றின் மீதான தடையினை விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் 3.08.2018 அன்று ஆணையிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புகார்கள் மற்றும் சட்ட ஒழுங்கு மற்றும் இதர காரணங்களினால் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த, ரத்து செய்யப்பட்ட, ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பாதியில் நிறுத்தப்பட்ட நிலுவையிலிருந்து தொடர தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ள சங்கங்கள் தவிர்த்து அனைத்து சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு புதிய நிர்வாகக்குழு தேர்தல் முடிவுகளை உடன் அறிவித்திட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    வருகிற 6-ந்தேதி 2-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 3-ம், 4-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் 7-ம் தேதி அறிவிக்கப்படும். 3 மற்றும் 4 நிலையிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற 11-ந்தேதி நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#CooperativeSocietiesElection

    ×