search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிப்ட்டோ கரன்சி"

    கிரிப்ட்டோ கரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியோ அல்லது மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளோ அங்கீகரிக்கவில்லை. எனவே இவற்றில் ஏமாற்றுதல் நடப்பதற்கு பிற்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது என்று கருதப்படுகிறது.
    கிரிப்ட்டோ கரன்சியை தமிழில் ‘மெய்நிகர் பணம்’ என்று அழைக்கிறார்கள். இதை டிஜிட்டல் பணம் என்றும் கூறலாம்.

    ஒரு கடையில் நாம் பொருட்கள் வாங்குகிறோம். அதற்கு 500 ரூபாய் நோட்டை கொடுக்கிறோம். நாம் வாங்கிய பொருட்களுக்கான தொகை போக மீதி பணத்தை கொடுப்பதற்கு கடைக்காரரிடம் சில்லரை இல்லை. அந்த சூழ்நிலையில் அவர் மீதி பணத்தை கிரிப்ட்டோ கரன்சி மூலம் வழங்குவார்.

    கிரிப்ட்டோ கரன்சி என்பது பணம் அல்ல. அது டிஜிட்டல் பணம். அதை பார்க்கவோ, தொட்டு உணரவோ முடியாது.

    டிஜிட்டல் பணத்துக்காக ஒரு குறிப்பிட்ட எண்கள், ரகசிய குறியீடுகள் இணைய தளம் வழியாக நம்மிடம் வழங்கப்படும். இந்த பணத்தை அதே கடைக்காரரிடமோ அல்லது கிரிப்ட்டோ கரன்சி பரிவர்த்தனை செய்யும் மற்ற கடைகளிலுமோ கொடுத்து நாம் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அல்லது வேறு பொருட்கள் வாங்கலாம். இதுதான் கிரிப்ட்டோ கரன்சி.

    கிரிப்ட்டோ கரன்சியை பயன்படுத்துவதற்கு நாம் முதலில் இணைய தளத்தில் அதற்குரிய பக்கத்திற்கு சென்று கணக்கு தொடங்க வேண்டும். அது சாதாரணமானதுதான். நம்மால் அவ்வாறு தொடங்க முடியவில்லை என்றால் இதற்கான ஏஜென்சிகளும் இருக்கின்றன. அவர்களிடம் சென்று கணக்கு தொடங்கி கொள்ளலாம்.

    நம்மிடம் இருந்து டிஜிட்டல் முறையில் கையொப்பம் ஒன்று பெறப்படும். அதன் மூலமாக கிரிப்ட்டோ கரன்சி பரிவர்த்தனைகளை செய்யலாம்.

    இந்த கிரிப்ட்டோ கரன்சி பணத்தை எந்த ஒரு சட்டப்பூர்வ அமைப்பும் உருவாக்கவில்லை. யாரோ முகம் தெரியாதவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். பிளாக் செயின் நெட் ஒர்க் தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது.

    தற்போது பல வகை கிரிப்ட்டோ கரன்சிகள் உள்ளன. இப்போது பிரபலமாக இருக்கும் ‘பிட் காயின்’ கூட கிரிப்ட்டோ கரன்சி வகைகளில் ஒன்றாகும். இதேபோல எத்திரியம், ட்ரான், டோஜ், ஷிபா, லைட் காயின், ரிப்பில் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்ட்டோ கரன்சிகள் புழக்கத்தில் உள்ளன.

    சாதாரணமாக நாம் கையில் வைத்திருக்கும் பணத்துக்கு எப்போதும் ஒரே மதிப்பு தான் இருக்கும். உதாரணத்துக்கு நம்மிடம் 100 ரூபாய் இருக்கிறது என்றால், அதன் மதிப்பு எப்போதும் 100 ரூபாய் தான்.

    ஆனால் கிரிப்ட்டோ கரன்சி மதிப்பு அதுபோல ஒரேமாதிரியாக இருக்காது. அதன் தேவை, அதிக வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் கிரிப்ட்டோ கரன்சியின் மதிப்பு உயரும் அல்லது குறையும்.

    அதாவது பங்குச்சந்தையில் பங்குகளின் விலை ஏற்றத்தாழ்வுபோல இதன் மதிப்பும் ஏற்றத்தாழ்வாக இருக்கும். தற்போது ஒரு பிட்காயின் விலை ரூ.47 லட்சத்து 900 ஆக உள்ளது.

    இதேபோல ஒரு எத்திரியம் காயின் விலை ரூ.3 லட்சத்து 41 ஆயிரமாக உள்ளது. ஒவ்வொரு கிரிப்ட்டோ கரன்சி பணமும் இதேபோல வர்த்தகத்துக்கு தகுந்த மாதிரி மாறுபடும்.

    கிரிப்ட்டோ கரன்சியின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருப்பதால் இவற்றை பயன்படுத்தும் நாம் பங்குச்சந்தை போல லாபமும் சம்பாதிக்க முடியும். எனவே பலர் இப்போது கிரிப்ட்டோ கரன்சி பணத்தை பெற்ற வர்த்தகம் செய்து வருகிறார்கள்.

    கிரிப்ட்டோ கரன்சி பணத்தை ஹேக் செய்வதோ, மோசடி செய்வதோ முடியாது. அதற்கான பாதுகாப்பு அம்சங்களுடன் அதை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    நம்மிடம் உள்ள கிரிப்ட்டோ கரன்சி பணத்தை இணையதள டிஜிட்டல் லாக்கரில் நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை யாரும் தொட முடியாது.

    இப்போது கிரிப்ட்டோ கரன்சி பயன்பாட்டை தடை செய்ய மத்திய அரசு சட்டம் கொண்டுவருவதற்கு முக்கிய காரணம் உள்ளது.

    கிரிப்ட்டோ கரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியோ அல்லது மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளோ அங்கீகரிக்கவில்லை எனவே இவற்றில் ஏமாற்றுதல் நடப்பதற்கு பிற்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது என்று கருதப்படுகிறது.

    மேலும் தற்போது பல நிறுவனங்கள் வருமான வரியை தவிர்ப்பதற்கும், மத்திய அரசின் கண்காணிப் பில் இருந்து தப்பிப்பதற்கும் கிரிப்ட்டோ கரன்சி முறையில் பண பரிவர்த்தனைகளை செய்கின்றன. இதனால் மத்திய அரசுக்கு வரக்கூடிய வரி கிடைக்காமல் போகும். அதன் கண்காணிப்பு வளையத்தில் இருந்தும் இவை தப்பிவிடும். எனவே தான் கிரிப்ட்டோ கரன்சியை தடை விதிப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது.

    ஒரு நாட்டில் புழக்கத்தில் உள்ள பணம் அந்த நாட்டில் மட்டும் தான் செல்லுபடி ஆகும். ஆனால் கிரிப்ட்டோ கரன்சி உலகில் எந்த நாட்டிலும் வேண்டுமானால் செல்லுபடியாகும். இதனால் பலரும் இதை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

    இப்போது இந்தியாவில் பல நிறுவனங்கள் இவற்றை சர்வசாதாரணமாக பயன்படுத்த தொடங்கி விட்டன. விவரம் தெரிந்த பலரும் இதை பயன்படுத்துகிறார்கள். இது பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று கருதியதால் இந்தியாவில் தடை கொண்டு வரப்படுகிறது.


    ×