search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காருனா"

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நார்வே வீரர் கார்ல்சென், அமெரிக்காவின் காருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். #WorldChampionship #Chess #MagnusCarlsen
    லண்டன்:

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனை எதிர்த்து, 8 வீரர்கள் இடையிலான ‘கேன்டிடேட்’ போட்டியில் வெற்றி பெறுபவர் மோதுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 3 வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான மாக்னஸ் கார்ல்சென்னை (நார்வே), ‘கேன்டிடேட்’ போட்டியில் வெற்றி கண்ட அமெரிக்காவின் பாபியானோ காருனா எதிர்கொண்டார்.



    12 சுற்றுகள் அடங்கிய இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றும் டிரா ஆனது. 132 ஆண்டு கால உலக செஸ் போட்டி வரலாற்றில், 12 சுற்று ஆட்டங்களில் ஒன்றில் கூட முடிவு கிடைக்காதது இதுவே முதல் நிகழ்வாகும். கடைசி சுற்றில் கார்ல்சென் வெற்றி பெறும் நிலையில் இருந்தார். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் டிராவுக்கு ஒப்புக் கொண்டார். அது தவறான முடிவு என்று முன்னாள் ஜாம்பவான்கள் கேரி காஸ்பரோவ், வினாடிமிர் கிராம்னிக் விமர்சித்தனர். தற்காப்பு ஆட்ட மனநிலையுடன் கார்ல்சென் ஆடிய விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

    இந்த நிலையில் இருவரும் தலா 6 புள்ளிகள் வீதம் பெற்று சமநிலை நீடித்ததால், சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இதையடுத்து அதிவேகமாக ஆடக்கூடிய ‘ரேபிட்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இருவரும் 4 சுற்றில் சந்திக்க வேண்டும். அதிக வெற்றி பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    ‘ரேபிட்’ முறையில் முதல் ரவுண்டில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 55-வது நகர்த்தலில் ‘செக்’ வைத்து எதிராளியை சாய்த்தார். தொடர்ந்து 2-வது சுற்றில் 28-வது நகர்த்தலிலும், 3-வது சுற்றில் 51-வது நகர்த்தலிலும் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 27 வயதான கார்ல்சென் 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4-வது முறையாக பட்டத்தை உச்சிமுகர்ந்திருக்கிறார்.

    கார்ல்சென் கூறும் போது, ‘இது எனக்கு மிகப்பெரிய வெற்றி. காருனா மிகவும் நன்றாக ஆடினார். நான் இதுவரை ஆடிய உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலேயே காருனா தான் வலிமையான எதிராளி. மூன்று வார கால டென்ஷனுக்கு பிறகு இப்போது தான் நிம்மதி அடைந்துள்ளேன்’ என்றார்.

    1972-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க வீரர் யாரும் உலக செஸ் போட்டியில் வாகை சூடியதில்லை. நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்ட தீவிரம் காட்டிய காருனாவின் கனவு தகர்ந்தது. ‘ரேபிட் சுற்றில் கார்ல்செனுக்கு நெருக்கடி கூட கொடுக்க முடியவில்லை. மொத்தத்தில் மோசமான நாளாக அமைந்தது’ என்று தோல்விக்கு பிறகு 26 வயதான காருனா குறிப்பிட்டார்.கார்ல் செனுக்கு ரூ.4 கோடியே 37 லட்சமும், காருனாவுக்கு ரூ.3 கோடியே 57 லட்சமும் பரிசுத்தொகையாக கிடைத்தது.  #WorldChampionship #Chess #MagnusCarlsen
    ×