search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுரி லங்கேஷ் படுகொலை"

    பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர்கள், குற்றத்தை ஒப்புக்கொள்ள தங்களிடம் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் மீது குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #gaurilankesh
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இடதுசாரி கொள்கையுடைய கவுரி லங்கேஷை இந்துத்துவா ஆதரவாளர்கள் சுட்டுக்கொன்றதாக கர்நாடக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வுப்படை அமைக்கப்பட்டது. இதில் எந்த துப்பும் துலங்கவில்லை.

    கொலை நடந்த ஒரு ஆண்டுக்கு பின் மராட்டிய தீவிரவாத தடுப்பு படை போலீசாரிடம் சுதன்வா கொன்தலேகர், நரேந்திர தபோல்கர், கர்பிர்ஜி ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கவுரி லங்கேஷை குறிபார்த்து சுட்டுக்கொன்றதாக பரசுராம் வக்மரே, மனோகர் எடவே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான குற்றவாளிகள் அனைவரும் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரும் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் பரசுராம் வக்மரே, மனோகர் எடவே ஆகியோரை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்று ஆஜர்படுத்தினர்.

    பின்னர் வெளியே வந்த இருவரும் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களுக்கு கவுரி லங்கேஷ் கொலையில் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அந்த கொலையில் ஈடுபடவில்லை. போலீசார் தான் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி ரூ.25 லட்சம் பேரம் பேசினார்கள் என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டனர்.

    இதனால் கவுரி லங்கேஷ் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலையாளிகள் திடீர் என்று போலீஸ் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதால் தங்கள் மீதான புகாரை திசை திருப்பும் செயலா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #gaurilankesh
    கவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான நவீன் குமார், துப்பாக்கிக்கு ரத்தத்தால் பூஜை செய்தது பற்றிய பரபரப்பு தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அவருடைய வீட்டு முன்பு வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவினர், விசாரணை நடத்தி சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் தொடர்புள்ள நவீன் குமாரை கைது செய்தனர்.

    மேலும், எழுத்தாளர் பகவான் கொலை வழக்கில் தொடர்பு கொண்டு கைதாகி உள்ள மராட்டியத்தைச் சேர்ந்த அமுல் காளே, அமித் திக்விகார் என்ற பிரதீப் மகாஜன் மற்றும் விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த மனோகர் துண்டப்பா யாவடி, பிரவீன் ஆகியோரையும் சிறப்பு விசாரணை குழுவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 4 டைரிகள், 22 செல்போன்கள், 74 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கும், கவுரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, 9 மாதங்கள் கழித்து கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு 3-வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 30-ந் தேதி சிறப்பு விசாரணை குழுவினர் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் நவீன் குமார் மற்றும் பிரவீன் என்ற சுசீத்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. நவீன்குமார் பற்றி அவருடைய மனைவி கொடுத்த விவரங்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    நவீன் குமார் தான் வைத்திருந்த துப்பாக்கியை சிவமொக்காவில் இருந்து கடந்த ஆண்டு(2017) வாங்கி வந்தார். முன்னதாக, அவர் கலாசிபாளையா என்.ஆர். ரோட்டில் உள்ள கடையில் ரூ.3 ஆயிரம் கொடுத்து 8 ஆண்டுகளுக்கு முன்பு 18 குண்டுகளை வாங்கினார். துப்பாக்கி எதற்கு என்று கேட்ட அவருடைய மனைவியிடம், ‘இது பொம்மை துப்பாக்கி. உண்மை துப்பாக்கி இல்லை. வீட்டுக்கு வரும் குரங்குகளை விரட்ட பயன்படும்‘ என்று கூறியுள்ளார். மேலும் ஆயுத பூஜையின்போது துப்பாக்கியை வைத்து நவீன்குமார் சிறப்பு பூஜை செய்ததுடன், அவருடைய ரத்தத்தால் துப்பாக்கிக்கு திலகமிட்டு ‘ஜெய் பாரத் மாதா‘ என கூறியுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.
    ×