search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் பாசி"

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • கடல் பாசி 30 முதல் 40 நாட்கள் வரை வளர்க்கப்பட்டு அறுவடைக்கு தயார் செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தின் அருகே உள்ள கடல்பகுதியில் கடல்பாசி வளர்ப்பு பணி நடைபெற்று வருகிறது. அதில் சின்னமுட்டம் மற்றும் ஆரோக்கியபுரத்தை சார்ந்த மீனவ கிராமங்களில் 25 பயனாளிகள் கடற்பாசி வளர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதம மந்திரி மத்திய சம்பட யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 2 அலகுகள் வீதம் 25 பயனாளிகளுக்கு 50 அலகுகள் என்ற வீதத்தில் சென்னை ஆணையர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தால் கடற்பாசி வளர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடல்பாசி வளர்க்கும் திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடற்பாசியானது கடலில் கயிறு மற்றும் மூங்கில் மிதவைகள் மூலம் கடற்பாசிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் முழுவளர்ச்சியானது 30 முதல் 40 நாட்கள் வரை வளர்க்கப்பட்டு அறுவடைக்கு தயார் செய்யப்படுகிறது.

    கடற்பாசி ஊட்டச்சத்து மிக்க உணவாக மனிதன் மற்றும் விலங்குகளுக்கும் பயன்படுகிறது. மருந்து மூலப்பொருட்கள் இக்கடற்பாசி மூலமாக தயார் செய்யப்படுகிறது. குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் வேதிபொருட்கள் தயாரிக்கவும், வேளாண் துறையில் உரம் தயாரிக்கவும், அழகு பொருட்கள் தயாரிக்கவும், அகார் என்னும் மூலப்பொருட்கள் கடற்பாசியிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.

    கடலில் வளர்க்கப்படும் கடற்பாசிகள் ஈரத்தன்மையுடன் கிலோவிற்கு ரூ.8 என்றும் உலர்ந்த கடற்பாசி கிலோவிற்கு ரூ.60 என்று நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, கடல்பாசி வளர்ப்பினால் பல்வேறு நற்பயன்கள் இருப்பதால் இதனை வளர்ப்பதற்கு மீனவர்கள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) காசிநாதபாண்டியன், உதவி இயக்குநர், மீன்வளத்துறை ஆய்வாளர், மீன்வளத்துறை (கடல்) முதல்வர், கடலோர அமலாக்க பிரிவு ஆய்வாளர், சார்நிலை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×