search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை"

    • அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது.
    • சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.

    போடி:

    மதுரை-போடி வழித்தடத்தை அகல ரெயில்பாதையாக மாற்றுவதற்காக 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27-ந்தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்றுமுதல் போடி வரை இந்த ரெயில் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக ஓ.எம்.எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் நேற்று சோதனை நடைபெற்றது. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரெயில்(06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப்போடியை வந்தடைகிறது. மீண்டும் 5.50-க்கு புறப்படும் இந்த ரெயில் (06702) இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது.

    இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரெயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.15 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.

    மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரெயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி, முன்பதிவு பெட்டிகள் 4, 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல்வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முதல் ஸ்லீப்பர் கோச்சுக்கு ரூ.390, 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ரூ.1025, 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.1445, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2415 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் தற்போது போடியில் இருந்து சென்னை வரை ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் சென்னைக்கு கல்வி கற்க செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விளைபொருட்களை கொண்டுசெல்லும் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர். 

    ×