search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊருக்குள் புகுந்த காட்டு யானை"

    • விநாயகன் என்று அழைக்கப்படும் காட்டு யானைதான் தினமும் ஊருக்குள் வருகிறது.
    • கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடலூர்:

    கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர், மட்டம், ஒற்ற வயல், செட்டியங்காடி உள்பட பல்வேறு கிராமங்களுக்குள் காட்டு யானை ஒன்று தினமும் வருகிறது. மேலும் அங்கு பயிரிட்டு பராமரித்து வரும் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் எதிரே வரும் பொதுமக்களை காட்டு யானை விரட்டும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. அலறியடித்து ஓட்டம் இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு மச்சிகொல்லி கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து முக்கிய சாலையில் நடந்து சென்றது.

    இதை கண்ட பொதுமக்கள், அலறி அடித்தவாறு தங்களது வீடுகளுக்குள் சென்று பதுங்கினர். இதேபோல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை மையத்துக்கு கொண்டு செல்லும் ஊழியர்கள் காட்டு யானையை கண்டு ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் காட்டு யானை தனியார் தோட்டத்துக்குள் சென்றது. அதன் பின்னரே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, விநாயகன் என்று அழைக்கப்படும் காட்டு யானைதான் தினமும் ஊருக்குள் வருகிறது. இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×