search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளிகள் மூடல்"

    • விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் பெற்றோர்கள் சேர்ப்பது வழக்கம்.
    • தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர்.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா தமிழகத்தில் கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் பெற்றோர்கள் சேர்ப்பது வழக்கம். இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் சேர்க்கை இருப்பதால், பெரும்பாலான பகுதிகளில் தொடக்கப் பள்ளிகள் மூடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக தமிழக அரசு விஜயதசமி அன்று தனியார் பள்ளிகள் திறப்பது போல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமாவது பணிக்கு வரவழைத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 1300-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன. பின்னர் பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களை ஆர்வமுடன் பள்ளி அறைக்கு கொண்டு சென்று ஆசிரியர்கள் விளையாட்டு மற்றும் ஆடிப்பாடி பாடல்கள் கூறி கல்வி கற்பித்தனர்.

    கடலூர் பகுதியில் ஒரு சில அரசு தொடக்கப்பள்ளி இன்று திறக்காமல் வழக்கம் போல் மூடி இருந்தது. இதன் காரணமாக அந்தந்த பகுதி மாணவர்கள் அரசு பள்ளி மூடி இருந்த காரணத்தினால் தனியார் பள்ளியில் சேர்க்கக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் தமிழக அரசு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் புதிய திட்டங்கள் அறிவித்து அதனை கண்காணிக்க அதிகாரிகள் நியமித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் ஆசிரியர்களின் அலட்சியப் போக்கு காரணமாக பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆகையால் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் இதுபோன்ற காலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கடலூர் மாவட்டத்தில் எந்தெந்த பள்ளிகள் திறக்கப்படவில்லை யார் யார் பணிக்கு வரவில்லை என கண்டறிந்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×