search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா சாலை"

    • பாலத்தை சரிவர பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • கூவத்தை கழிவுநீர் கால்வாயாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    சென்னை அண்ணா சாலையில் ஜிம்கானா கிளப் அருகில் கூவம் ஆற்றின் குறுக்கே பழமையான பெரியார் பாலம் அமைந்து உள்ளது. இந்த பாலம் செயின்ட் ஜார்ஜ் பாலம் என்றும் அழைக்கப்பட்டது.

    சென்னை தீவுத்திடலின் தெற்கு பகுதியை மாநகரின் சுற்றுப்புற பகுதிகளுடன் இணைப்பதற்காக கூவம் ஆற்றின் குறுக்கே இந்த பாலம் முதலில் 1805-ம் ஆண்டு புனித ஜார்ஜ் என்ற பெயரில் கட்டப்பட்டது.

    புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து திருவல்லிக்கேணியின் சுற்றுப்புற பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த பாலம் திருவல்லிக்கேணி பாலம் என்றும் முன்பு அழைக்கப்பட்டது.

    பெரியார் பாலம்

    1920-ம் ஆண்டில் மீண்டும் புதுப்பித்து கட்டப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு புனித ஜார்ஜ் பாலம், பெரியார் பாலம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன.

    ஏராளமான பொதுமக்களும் இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்று வருகிறார்கள். இந்த நிலையில் இப்பாலம் பழுதடைந்து உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், தூண்களில் மரம், செடி, கொடிகள் முளைத்து வளர்ந்து உள்ளன.

    பாலத்தை சரிவர பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலத்துக்கு கேடு விளைவிக்கும் மரம், செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதேபோல் கூவம் பாலத்தின் கரையோர பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் அருகில் உள்ள புதர்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளன.

    மேலும் இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் கைப்பிடி சுவர் உயரம் குறைவானதாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பாலத்தின் வழியாக நடந்து செல்பவர்கள் தடுமாறி கூவம் ஆற்றில் விழுந்து விட வாய்ப்பு உள்ளது.

    எனவே கைப்பிடி சுவர்களின் உயரத்தை அதிகரித்து பாதுகாப்பு கம்பிகள், வேலிகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சென்னை மாநகரில் பாயும் 3 ஆறுகளில் ஒன்று கூவம் ஆறு. ஒருகாலத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடிப்பும், படகு போட்டியும் நடந்தன.

    கூவம் ஆறு

    இந்த ஆறானது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது. 75 கி.மீ. ஓடும் இந்த கூவமானது, சென்னையின் புறநகரில் 40 கி.மீட்டரும், நகருக்குள் 18 கி.மீட்டரும் ஓடுகிறது. சென்னை மாநகர பகுதியில் கழிவுநீர் ஆறாக கூவம் ஆறு இப்போது ஒடுகிறது.

    கூவத்தை கழிவுநீர் கால்வாயாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை நேப்பியர் பாலம் அருகே வங்கக்கடலில் இது கலக்கிறது. எழும்பூர், புதுப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள், கார், டூவீலர் ஒர்க் ஷாப், ஆகியவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டன.

    இந்த நிலையில் தற்போது இந்த கார்டன் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு பழைய கார், வேன்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் கழிவுப் பொருட்கள் சாலையோரம் கொட்டப்பட்டு உள்ளதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×