search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yeddurappa"

    கர்நாடக பட்ஜெட்டில் மின் கட்டணம் - டீசல் விலையை உயர்த்தியதால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். #yeddyurappa #Karnatakabudget #kumaraswamy

    பெங்களூரு:

    கர்நாடக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    முதல்-மந்திரி குமாரசாமி காங்கிரசின் கருணையால் தான் பதவியில் இருக்கிறேன், மக்களின் ஆதரவில் இல்லை என்று அவர் ஏற்கனவே கூறியதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார். குமாரசாமி அரசியல் கட்டாயத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்துகிறார்.

    அதே போல் காங்கிரஸ் கூட்டணியில் செயல்படும் மாநில அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு முரண்பாடாக உள்ளது. அதனால் மாநில பட்ஜெட், முரண்பாடான பட்ஜெட்டாக உள்ளது. முன்பு சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட் அமல்படுத்தப்படும் என்று கூறி இருக்கிறார். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதுபற்றி ஒரு விரிவான தகவல் எதுவும் இல்லை.

    காங்கிரஸ் உறுப்பினர்களே இந்த பட்ஜெட்டுக்கு அதிருப்தி அடைந்துள்ளனர். மண்டல ஏற்றத்தாழ்வு பிரச்சினைக்கு பட்ஜெட்டில் தீர்வு இல்லை. இது அண்ணன்-தம்பி பட்ஜெட். அவர்கள் சார்ந்துள்ள ராமநகர், மண்டியா மாவட்டங்களின் பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம் கர்நாடக மக்களை குமாரசாமி அவமதித்துவிட்டார். ஆட்சியில் இல்லாதபோது நீர்ப்பாசனத்துறை பற்றி குமாரசாமி அதிகமாக பேசினார்.


    ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த துறைக்கு முன்னுரிமை கொடுக்க அவர் தவறிவிட்டார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரானது. வேலை இல்லாத இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். டீசல் விலையை உயர்த்தி இருப்பதால், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.

    அன்ன பாக்ய திட்டம் மத்திய அரசுக்கு சேர்ந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு தலா 7 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதை 5 கிலோவாக குறைப்பதாக குமாரசாமி அறிவித்துள்ளார். இது ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். மின் கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாய கடன் தள்ளுபடி வி‌‌ஷயத்தில் குமாரசாமி நேர்மையாக செயல்படவில்லை.

    விவசாயிகளின் கடனில் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்வதாக கூறி இருக்கிறார். விவசாயிகளுக்கு குமாரசாமி துரோகம் செய்துவிட்டார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார். மகளிர் சுயஉதவி குழுக்கள், மீனவர்கள், நெசவாளர்களின் கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி வாக்குறுதி அளித்து இருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவும் அவர் தவறிவிட்டார். இந்த வாக்குறுதிகளை கூறி தான் குமாரசாமி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இது கர்நாடகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #yeddyurappa #Karnatakabudget #kumaraswamy

    ×