search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "working"

    அவசர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்க முடியாது என மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    மாவட்ட மற்றும் தாலுகா அரசு ஆஸ்பத்திரிகளில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்க முடியாது என மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    மருத்துவ மேற்படிப்பில் சேரும்போது, தொலைதூரம், எளிதில் அணுக முடியாத பகுதி, குக்கிராமங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், எது தொலைதூரப் பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி என வரையறை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    தமிழக அரசு, நகரங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளை தொலைதூரப்பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி என வரையறை செய்துள்ளதால் நகர்ப்புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என்றும், உண்மையில் தொலை தூரப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு டாக்டர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.

    பின்னர், தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ஏற்க முடியாது என்றும், அந்த அரசாணையை ரத்து செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சி.மணிசங்கர், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், பி.வில்சன், ரிச்சர்டு வில்சன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தொலைதூர பகுதிகள், எளிதில் அணுகமுடியாத பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கும், மருத்துவ மேற்படிப்புக்கான சலுகை மதிப்பெண்கள் வழங்குகிற வரையறை விதிகள் செல்லும்.

    அதேசமயம் அரசாணைப்படி மாவட்ட, தாலுகா அரசு ஆஸ்பத்திரிகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, தாய்சேய் நலம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, என்.ஐ.சி.யு., எஸ்.என்.சி.யு. போன்ற குழந்தைகள் நலப்பிரிவுகளில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் இத்தகைய சலுகை மதிப்பெண்களை பெற முடியாது.

    இந்த பகுதிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சலுகை வழங்குவது என்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது. எனவே, இந்த வகைப்பாட்டினை மட்டும் ரத்து செய்கிறோம். மற்றபடி அந்த அரசாணை செல்லும்.

    இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கவும், சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்கு ஏற்ற பகுதிகளை கண்டறியவும் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முடிவு செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். 
    ×