என் மலர்
நீங்கள் தேடியது "Visiting with family"
+2
- நெல்லையில் 8-ம் ஆண்டு நூற்றாண்டில் பாண்டியர் ஆண்ட காலத்தில் பாளையங்கோட்டையில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தினார்கள்.
- கோட்டை பகுதி சிதிலமடைந்து காணப்பட்டதால் பழமை மாறாமல் புனரமைத்து நாளைய சந்ததியினருக்கு தொன்மையான அடையாளத்தை பாதுகாத்து வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை:
தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது நெல்லை.
மாநகரில் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அதற்கேற்ப போதுமான பொழுதுபோக்கு இடங்கள் இல்லாமல் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
தினமும், மாலை நேரங்கள் மட்டுமல்லாமல் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் மாநகர பொதுமக்கள் செல்வதற்கு ஏதுவாக வ.உ.சி. மைதானம், மாவட்ட அறிவியல் மையம் உளளிட்ட ஒரு சில இடங்கள் மட்டுமே உள்ளது.
அந்த வரிசையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பாளை கோட்டை போலீஸ் நிலையமும் சேர்ந்துள்ளது.
நெல்லையில் 8-ம் ஆண்டு நூற்றாண்டில் பாண்டியர் ஆண்ட காலத்தில் பாளையங்கோட்டையில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தினார்கள்.
அதன்பின் பாளையக்கா ரர்களும், தொடர்ச்சியாக ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை நிர்வாக அலுவலகமாகவும், அதன் ஒரு பகுதியை சிறையாகவும் பயன்படுத்தி வந்தனர். இங்குதான் ஊமைத்துரையை சிறை வைத்துள்ளனர்.
இதனால் பல வரலாறு கொண்டுள்ள கோட்டையாக இது உள்ளது. மற்றொரு அடையாளம் பாளையங்கோட்டை பஸ் நிலையத்தின் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலை பகுதி, மற்றொரு பகுதி பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு அருங்காட்சியகமாகும்.
பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோட்டை பழங்கால ஆட்சியின் அடையாளமாக உள்ளது. எஞ்சி இருக்கும் கொத்தளத்தின் மேல் காவல் நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. ஏறத்தாழ 30 அடி உயரமுள்ள கோட்டைச் சுவரின் மீதான கொத்தளத்தில் அமையப் பெற்றதால் ' மேடை' என்ற அடைமொழி இந்தக் காவல் நிலையத்தோடு ஒட்டிக் கொண்டுவிட்டது.
கோட்டை பகுதி சிதிலமடைந்து காணப்பட்டதால் பழமை மாறாமல் புனரமைத்து நாளைய சந்ததியினருக்கு தொன்மையான அடையாளத்தை பாதுகாத்து வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மேற்கு கொத்தளம் எனஅழைக்கப்படும் இந்த கோட்டையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தின் கீழ் ரூ. 3.6 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணியினை சபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து பணிகள் முழுவதும் நிறைவடைந்து மேடை போலீஸ் நிலையம் இருந்த கோட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறந்து வைத்தார்.
தற்போது புதுப்பிக்கப்பட்ட இடத்தில் கோட்டையின் வரலாற்றை கூறும் ஓவியங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதன் வெளிப்புறம் உள்ள புளியமரம், வேம்பு மரங்களை சுற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள வளாகத்தில் மிகப்பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுவதுடன், கோட்டை போலீஸ் நிலையம் ேதான்றிய வரலாறு, அதன் சிறப்புகள் அகன்ற திரையின் வழியாக ஒலிபரப்பப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் பார்க்கும் வகையில் சிறிய அளவிலான கான்கிரீட் கேலரிகள், புல்வெளி தரை, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுக்கும் செய்யப்பட்டு உள்ளது.
புதுப்பொலிவு
அலங்கார விளக்குகள், படிக்கட்டுகளில் அபிவிருத்தி பணிகள் செய்தல் மற்றும் 345 சதுரமீட்டர் அளவிற்கு வரலாற்று பூங்கா புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது கோட்டை புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மேடை போலீஸ் நிலையத்தில் கைதிகளை அடைத்து வைப்பதற்காக ஒரு சிறை அறை உள்ளது. தற்போது அந்த அறை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் கம்பிகள் ஒவ்வொன்றும் அதிகளவு எடைகள் கொண்டதாக உள்ளது.
பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது மட்டுமின்றி மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக, புதிதாக கட்டிடம் கட்டப்பட்டாலும் அங்கு ஏற்கனவே இருந்த மரங்களுக்கு சிறு சேதாரமும் இல்லாமல் பணிகள் நடந்துள்ளது. இதனால் அந்த மரங்கள் அப்படியே உள்ளது. அதனை ஒட்டியவாறு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மாடியில் நின்று பார்க்கும் போது கட்டிடத்தில் ஊடுருவியவாறு மரம் வளர்ந்தது போன்று திகைப்பை ஏற்படுத்துகிறது. இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதேபோல அந்த காலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தினார்கள் என்பதனை நினைவுபடுத்தும் விதமாக கல்லினால் செய்யப்பட்ட பீரங்கிகள் வைக்கப்பட்டுள்ளது. இது தூரத்தில் நின்று பார்க்கும் போது நிஜத்தினாலான பீரங்கிகளை நினைவுபடுத்துகிறது.
இந்நிலையில் புதுப்பிக்கப்பட்டுள்ள கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தற்போது ஏராளமான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் குவிந்து வருகிறார்கள்.
தற்போது கோட்டை போலீஸ் நிலையத்தை பார்வையிட செல்லும் பார்வையாளர்கள் சிறைக் கதவுகளுக்கு பின்னால் நின்றும், பீரங்கிகளுக்கு பின்னால் நின்று செல்பி எடுக்காமல் செல்வது இல்லை. மொத்தத்தில் கோட்டை போலீஸ் நிலையம் செல்பி ஸ்பாட் ஆக மாறி உள்ளது






