search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villupuram Bus Stand"

    சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து விழுப்புரம் பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட ஏராளமானோர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

    விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி விட்டு மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக விழுப்புரம், வளவனூர், விக்கிரவாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் விழுப்புரம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணி முதலே குவிந்தனர். நேரம் செல்ல செல்ல சென்னைக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் சென்னைக்கு செல்லும் பஸ்கள் வரவில்லை. தென்மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக சென்னைக்கு சென்றன. பஸ் நிலையத்துக்குள் வரவில்லை.

    விழுப்புரத்தில் இருந்தும் சென்னைக்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் பஸ்சில் இடம் கிடைக்காமல் அவதியடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பு திரண்டனர். கூடுதலாக பஸ்களை இயக்ககோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் பஸ் வெளியே செல்லும் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற பகுதிகளுக்கு செல்ல கூடிய பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை. தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதலாக பஸ்கள் இயக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதை ஏற்றுகொண்ட பயணிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



    விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம போன் ஒன்று வந்தது. போனில் பேசிய வாலிபர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக விழுப்புரம் தனிப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல்டிடெக்டர் கருவியுடன் வந்ததை பார்த்த பயணிகள் பஸ் நிலையத்தில் ஏதோ வெடி குண்டு வெடிக்கப் போகிறதோ என்று நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடி குண்டு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்று பஸ் நிலையத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் பஸ் நிலையம் முழுவதும் சோதனை செய்த பின்னர் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை.

    விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது வெறும்புரளி என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போன் எங்கிருந்து வந்தது? என்பதை பார்த்த போது அது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது.

    இது குறித்து மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் கூனிமேடு சென்று விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த புவனேஷ் (வயது 17) என்பவர் போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கும், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் புவனேசை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    ×