search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "turn approver"

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். #INXMediaCase #IndraniMukerjea #KartiChidambaram
    புதுடெல்லி:

    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்திராணி முகர்ஜி, மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்காக பிப்ரவரி 7ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தும்படி கடந்த மாதம் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து அவர் சமீபத்தில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், ஐஎன்எக்ஸ் வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திராணி முகர்ஜி ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போதுதான், அவர் அப்ரூவராக மாறுவதற்கு ஒப்புக்கொண்டது ஏன்? அச்சுறுத்தலுக்கு பயந்து ஒப்புக்கொண்டாரா? அல்லது தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று வழக்கறிஞர் கூறியதால் ஒப்புக்கொண்டாரா? என்பது உறுதிப்படுத்தப்படும்.



    அதன்பிறகு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அமைப்பிடம் கருத்து கேட்கப்படும். சிபிஐ அளிக்கும் பதிலின் அடிப்படையில் இந்திராணி முகர்ஜிக்கு மன்னிப்பு வழங்கி அரசுத் தரப்பு சாட்சியாக சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி, அரசுத் தரப்பு சாட்சியமாக சேர்க்கப்பட்டால், கார்த்தி சிதம்பரத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். #INXMediaCase #IndraniMukerjea #KartiChidambaram
    ×