என் மலர்
நீங்கள் தேடியது "Tourists arrival"
- கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
- கொடைக்கானல் நகரின் நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்துகிடக்கின்றன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிவிடுமுறை காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
ஆனால் தொடர்மழை காரணமாக பல்வேறு இடங்களுக்கு சென்று காணமுடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இருந்தபோதும் குடைபிடித்தவாறு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்தும், பிரையண்ட் பூங்காவில் அழகிய மலர்களை கண்டுரசித்தும் வருகின்றனர்.
கொடைக்கானல் நகரின் நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்துகிடக்கின்றன. சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருந்தபோதும் சாலையோர வியாபாரிகள் கடை அமைக்க முடியாததால் அவர்கள் வியாபாரம் இன்றி தவித்து வருகின்றனர். ஏரிச்சாலை பகுதியில் கடைகள் வைத்திருப்போர் மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி சுற்றுலா பயணிகள் வரமுடியாத நிலை ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
நேற்றுஇரவு முதல் இன்றும் இடைவிடாமல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பேக்கேஜ் விடுமுறையில் கொடைக்கானலுக்கு வந்தவர்கள் பலர் விடுதியிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் சமயங்களில் ஏரிச்சாலையில் படகுசவாரி நிறுத்தப்படுகிறது. இருந்தபோதும் மழை நிற்கும் வரை சுற்றுலா பயணிகள் காத்திருந்து குடைபிடித்தவாறு படகுசவாரி செய்து மகிழ்கின்றனர்.
கொடைக்கானல் மலைகிராமங்களிலும், முக்கிய சாலைகளிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனமுடன் செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் நாளொன்றுக்கு சுமார் 20 முறை மின்தடை ஏற்படுகிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் விட்டுவிட்டு மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிப்பது இல்லை. ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளும் இந்த மின்தடையால் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு சில நட்சத்திர விடுதிகளில் மட்டுமே ஜெனரேட்டர் வசதி உள்ளது. இதனால் மற்ற விடுதிகளில் தங்கி உள்ளவர்கள் அவதியடைந்து வருகின்றனர். தொடர் மழை சமயத்திலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் வியாபாரிகள் தங்கள் தொழிலை இழந்து தவித்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
புத்தாண்டு வரை பயணிகளின் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலையோர வியாபாரிகள் மற்றும் தேனீர் கடை உரிமையாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.






