என் மலர்
நீங்கள் தேடியது "The cow slaughtering ceremony will stop"
- முறையான வழிமுறையை கடைப்பிடிக்காததால் நடவடிக்கை
- 2 நாட்கள் கழித்து மீண்டும் நடப்பதாக தகவல்
வேலூர்:
வேலூர் அடுத்த பெண்ணாத்தூரில் எருது விடும் திருவிழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளை மாடுகளை கொண்டு வந்தனர். காளைகள் ஓடுபாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் திரண்டு இருந்தனர்.
இதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. எருது விடும் விழாவை கண்காணிக்க டெல்லியில் இருந்து பீட்டா அமைப்பு தலைவர் மிட்டல் வந்து இருந்தார். அப்போது ஓடுபாதையில் சென்ற காளை மாடு மெயின் ரோட்டிற்கு சென்று அங்கு மிட்டல் நிறுத்தி வைத்திருந்த கார் மீது உரசியபடி சென்றது.
காளை மாடுகள் மெயின் ரோட்டுக்கு சென்றதால் மாடுகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் உரிய முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை எனக் கூறி எருது விடும் விழாவை பீட்டா அமைப்பு தலைவர் மிட்டல் தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த விழா குழுவினர் மற்றும் மாடுகளை கொண்டு வந்த உரிமையாளர்கள் ஆத்திரம் அடைந்து எக்காரணத்தைக் கொண்டும் எருது விடும் விழாவை தடுத்த நிறுத்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டமும் சாலை மறியலோ செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து காளை மாடுகளுக்கு நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்ட பணம் மீண்டும் திரும்பி கொடுக்கப்பட்டன. பின்னர் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை அவிழ்த்து கொண்டு சென்றனர்.
இதையடுத்து திருவிழா ரத்து செய்யப்பட்டது. எருது விடும் விழாவை காண வந்த பொதுமக்கள் விரக்தியுடன் கலைந்து சென்றனர். 2 நாட்கள் கழித்து மீண்டும் வேறு ஒரு பாதையில் எருது விழா நடத்தப்படும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.






