search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Forest department book 2017"

    வனத்துறை சார்பில் ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை-2017’ என்ற புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். #EdappadiPalaniswamy
    சென்னை:

    வனத்துறை சார்பில் ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை-2017’ என்ற புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19.6.2017 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலா கொள்கை-2017 உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி, தமிழ்நாடு வனத்துறை சார்பில், ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை 2017’ தேசிய வனக்கொள்கையில் கூறப்பட்டுள்ள சாராம்சங்களான உயிர்பன்மையை பாதுகாத்தல், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியும், பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் மற்றும் இக்கொள்கையோடு இணையப்பெற்ற அரசு துறைகள், தன்னார்வ நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுடன் நடத்தப்பட்ட விரிவான கருத்துக்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வனத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை-2017’ என்ற இந்த புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

    தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கையினை செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கும் துறையாக வனத்துறை செயல்படும். மேலும், இக்கொள்கையின் நோக்கங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக, மாநில சூழல் சுற்றுலா வாரியம் என்ற சிறப்பு நிறுவனம், தமிழ்நாடு பதிவுச் சட்டம் 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படும்.

    இந்த நிறுவனம், சூழல் சுற்றுலாவிற்கு உகந்த புதிய இயற்கை பகுதிகளை கண்டறிந்து, அவைகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு அளித்தல், அவ்விடத்தின் புனித தன்மைக்கு குந்தகம் விளைவிக்காதவாறு சூழல் சுற்றுலா பயணிகளின் வருகையை முறைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் முகமது நசிமுத்தின், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்(வனத்துறை தலைவர்) ரவிகாந்த் உபாத்யாய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×