search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tambaram Private Hospital"

    • இளம்பெண்ணை முதலில் ஐஸ்வர்யா நன்றாக கவனித்துக்கொண்டுள்ளார்.
    • ஐஸ்வர்யாயின் கணவர் பெயர் சூரஜ் ஜெனிஸ் கண்ணா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    திருவொற்றியூர்:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சென்னையிலும் பட்டதாரி பெண்ணிடம் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 4-வது பிளாக் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். பட்டதாரி பெண்ணான இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து கணவர் தாக்கியதில் இளம்பெண் காயம் அடைந்தார். இதுபற்றி எண்ணூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் இளம்பெண்ணின் கணவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இதன் பின்னர் கணவருடன் வாழ பிடிக்காத இளம்பெண் திருவொற்றியூர் என்.டி.குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது தோழியான ஐஸ்வர்யாவின் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

    முதலில் இளம்பெண்ணை, ஐஸ்வர்யா நன்றாக கவனித்துக்கொண்டுள்ளார். ஐஸ்வர்யாயின் கணவர் பெயர் சூரஜ் ஜெனிஸ் கண்ணா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் சூரஜ் ஜெனிஸ் கண்ணாவும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து இளம்பெண்ணின் உடலில் இருந்து கருமுட்டையை எடுத்து சட்ட விரோதமாக விற்பனை செய்ய திட்டமிட்டனர்.

    இதையடுத்து பெண் புரோக்கர் ஒருவர் மூலமாக தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து இளம்பெண்ணின் கருமுட்டையை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அவரது ஆலோசனையின் பேரில் இளம்பெண்ணை தாம்பரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பயந்து போன இளம்பெண் இதுபற்றி பிரிந்து சென்ற தனது கணவரிடம் போன் செய்து கூறியுள்ளார். அவர் நீ வீட்டுக்கு வா பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து தோழி ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு சென்று சொல்லி விட்டு வந்து விடுகிறேன் என கூறி இளம்பெண் அங்கு சென்றுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யாவும், அவரது கணவரான ஜெனிஸ் கண்ணாவும் சேர்ந்து இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கியதுடன் அடித்து உதைத்தும் துன்புறுத்தி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இங்கு இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட இளம்பெண் அங்கிருந்து தப்பிச்சென்று திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கருமுட்டை விற்பனை தொடர்பாக தாம்பரம் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்றும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    பெண் புரோக்கர் யார்? என்பதை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம் தனியார் ஆஸ்பத்திரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ×