என் மலர்
நீங்கள் தேடியது "கந்துவட்டி புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை-புதிய ஐ.ஜி. பேட்டி"
- கந்துவட்டி புகார்கள் வந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மத்திய மண்டல ஐ.ஜி. கூறியுள்ளார்
- கந்துவட்டி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்வதற்கும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
திருச்சி:
திருச்சி மத்திய மண்டல புதிய ஐ.ஜி.யாக சந்தோஷ்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவல் துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் கந்துவட்டி மக்கள் உயிரிழப்பை தடுப்பதற்கும் அப்பாவி பொதுமக்கள் மூலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஆபரேசன் கந்துவட்டி என்ற சிறப்பு திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி சம்பந்தமாக வரும் புகார்களுக்கு உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2021-ல் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 2 மாவட்டங்களில் கந்துவட்டி வசூல் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 116 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 39 வீடுகளில் சோதனை செய்யப்பட்டு சொத்துப் பத்திரங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இது வரையில் கந்துவட்டி தொடர்பான 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொது மக்களை ஏமாற்றிய நபர்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டு இவர்களிடமிருந்து பெறப்பட்ட வெற்று ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் கைது செய்யப்படாத குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கும், கந்துவட்டி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்வதற்கும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி புகார்கள் எவர் மீதேனும் வந்தால் சட்டப்படியாக துரிதமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






