search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer Drinks"

    • வெயிலின் உச்சகட்டம் தீவிரமாக காணப்படும்.
    • மாலைவரை வெயிலில் அலையாமல் இருப்பது மிக மிக முக்கியம்.

    கோடை காலம் வந்துவிட்டாலே சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கிவிடும். அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் கேட்கவே வேண்டாம். வெயிலின் உச்சகட்டம் தீவிரமாக காணப்படும்.

    கோடைகாலத்தை சமாளிக்க நாம் செய்ய வேண்டியது, முடிந்த அளவு வெயிலின் கடுமை அதிகமாக இருக்கும் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் அலையாமல் இருப்பது மிக முக்கியம்.

    ஒருவேளை அந்த நேரத்தில் வெயிலில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் சூரியக்கதிர்களில் இருந்து உங்களை பாதுகாக்க குடை பயன்படுத்தலாம், தலையில் தொப்பி அணியலாம். பெண்கள் துப்பட்டா மூலம் தலை, முகத்தை மூடிக்கொள்ளலாம். அடிக்கடி முகம், கை-கால்களை கழுவிக்கொள்வது நல்லது. இது தவிர கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்தரும் சில இயற்கை பானங்கள் பற்றிய விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

     நன்னாரி சர்பத்

    நன்னாரி வேர் 100 கிராம் (இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), சர்க்கரை 500 கிராம், தண்ணீர் ஐந்து கப், 2 எலுமிச்சை பழச்சாறு சாறு. நன்னாரி வேர்களை நன்கு சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து பொடித்து வர வேண்டும். பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நன்னாரி தண்ணீரில் சர்க்கரை, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி எடுக்க வேண்டும்.

    தேவையான வேளைகளில் இந்த நன்னாரி சர்பத்தில் தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும். இதை செய்வதற்கு கடினமாக இருந்தால் கடைகளில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தை வாங்கி பயன்படுத்தலாம். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், சிறுநீர் நன்றாக வெளியேறும்.

     வில்வப்பழ சர்பத்

    வில்வ பழத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் நாட்டு வெல்லம் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து மணப்பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவையான போது ஐந்து முதல் பத்து மில்லி அளவு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும். இது வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற பானமாகும். உடல் குளிர்ச்சியையும், குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும். குடல் புண்களை குணப்படுத்தும்.

     நீர் மோர்

    தயிருடன் நீர் சேர்த்து நன்றாக கலக்கி வெண்ணெய்யை வடிகட்ட வேண்டும். இந்த நீர் மோரில் இஞ்சி, புதினா, மிளகாய் அல்லது அதற்கு பதிலாக சிறிதளவு மிளகுத்தூள், வறுத்த பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல செரிமானம் உண்டாகும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீர் நன்றாக வெளியேறும்.

     இளநீர்

    கோடை காலம் வந்து விட்டாலே இளநீருக்கு சற்று மவுசு அதிகம் தான். இளநீரில் பொட்டாசியம் சத்து இருப்பதால் கோடை காலத்தில் வியர்வையால் ஏற்படும் சோர்வை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்.

     எலுமிச்சை பழ பானம்

    எலுமிச்சை பழச்சாற்றில் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து, புதினா இலை இரண்டு சேர்த்து குடிக்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள சிட்ரேட் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். இதில் உள்ள வைட்டமின் சி சத்து சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.

     செம்பருத்தி மணப்பாகு

    இது கோடைகாலத்திற்கு ஏற்ற சிறந்த பானம். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்கும். இதயத் தசைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். செம்பருத்தி இதழ்களை அரைத்து அதனுடன் தண்ணீர் கலந்து தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மணப்பாகு பதம் வந்தவுடன் ஆற வைக்கவும். தேவையான போது சிறிதளவு எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு ஆகியவற்றை கலந்து குடித்தால், கோடை வெயிலுக்கான உற்சாக பானம் தயாராகிவிடும்.

     தர்ப்பூசணி பழச்சாறு

    கோடை காலத்தின் வரப்பிரசாதமான தர்ப்பூசணி பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது தர்ப்பூசணி பழத்தின் சாற்றை குடிக்கலாம். இது தாகத்தை தணிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீர் பெருக்கி செய்கையும் இதற்கு உண்டு.

     லஸ்ஸி

    தயிர், சர்க்கரை கொண்டு தயாரிக்கும் இந்த பானம் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை கிடைக்கிறது.

     கரும்புச்சாறு

    கரும்புச் சாறுடன், சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும். உடல் சூடு, பித்தத்தை தணிக்கும், காமாலை நோயாளிகளுக்குநல்லது. ஜீரண சக்தி மேம்படும்.

     பார்லி தண்ணீர்

    பார்லியை நன்றாக கொதிக்க விட்டு, ஆற வைத்து குடிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களில் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் நீங்கும், சிறுநீரக கற்களை வெளியேற்றும். சிறுநீர் பெருக்கி குணம் இதற்கு உண்டு.

     முலாம்பழச்சாறு

    கோடை காலத்திற்கேற்ற சிறந்த பானம் முலாம் பழச்சாறு. இப்பழத்தில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. இது உடலின் தேவையற்ற கழிவுகளை அகற்றும். ஆரோக்கியமான சருமத்தை உருவாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும், சிறுநீர் கடுப்பு நீங்கும்.

    சீரக கொத்தமல்லி பானம்

    சிறிதளவு சீரகம், கொத்தமல்லி எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும், இது உடலுக்கு குளிர்ச்சியை தரும், பித்தத்தை அகற்றும், உடல் உள் உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றும்.

    தண்ணீர்

    கோடைகாலத்தில் பெரியவர்கள் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் தோலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், உடலுக்கு குளிர்ச்சி தரும், சிறுநீரகங்கள் சிறப்பாக வேலை செய்வதற்கு உதவி செய்யும்.

     பழைய சாதம்

    சாதத்தில் இரவு தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இது உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

    சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் புளிப்புச் சுவையைத் தருகிறது. பழைய சாதத்துடன், மோர், சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் துவையல் செய்து சாப்பிட்டால் சுவையே அலாதி தான். உடல் ஆரோக்கியத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் பழைய சாதம் தான் முதல் சாய்ஸ்.

     பானகம்

    இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

    பானகம் தயாரிக்கும் முறை:

    குளிர்ந்த தண்ணீர் 1 லிட்டர், வெல்லம் ஒரு கப், எலுமிச்சம் பழம்- ஒன்று, புளி-ஒரு எலுமிச்சை அளவு, சுக்கு கால் தேக்கரண்டி, ஏலக்காய் 2, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை, மஞ்சள் ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, துளசி இலை, புதினா இலை வகைக்கு ஐந்து.

    முதலில் புளியை தண்ணீரில் கரைத்து அதனுடன் வெல்லத்தை கரைக்கவும். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, சுக்கு, ஏலக்காய், மஞ்சள், மிளகு, ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வடிகட்டவும், அதனுடன் மணத்திற்காக புதினா இலை, துளசி இலையை போடவும், இப்போது சுவையான பானகம் தயார். இதை ஒரு பாட்டிலில் எடுத்துக்கொண்டு வெளியில் செல்லும்போது தண்ணீருக்கு பதில் அடிக்கடி குடித்து வரலாம்.

    பதநீர்

    ஆரோக்கியமான பானங்களில் பதநீர் இன்றியமையாத இயற்கை பானம். இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளது. இது எலும்புக்கு நல்ல பலத்தையும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.

    ×