search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Seminar"

    • தமிழ்நாட்டு வரலாறு என்கிற தலைப்பில் மாநிலக் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கருத்தரங்கை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு என்கிற தலைப்பில் மாநிலக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது :-

    இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்திலும் மேற்கொள்ளப்படாத தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தில்தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதற்கான நிதியுதவியை முதல்-அமைச்சர் அளித்து வருகிறார். இந்தியாவின் வரலாறு கங்கைச் சமவெளியில் எழுதுவது அல்ல. அது காவிரிக்கரையில் இருந்து எழுதக்கூடிய வரலாறாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    கீழடி, பொருநை, வெம்பக்கோட்டை வைப்பாறு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம் தமிழ்நாட்டினுடைய வரலாறு எந்த அளவுக்குப் பின்னோக்கிச் செல்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.நாம் என்னவாக இருந்தோம் என்பதை அறிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் என்னவாக வர வேண்டும் என்பதை தீர்மானிக்க இயலும். நம்முடைய தமிழர் நாகரிகம், நம் சமுதாயம் எப்படி இருந்தது, தமிழனுடைய நாகரிகம் எப்படி எல்லாம் மறைக்கப்பட்டது என்பதை எல்லாம் அறிந்து கொண்டால்தான், எதிர்காலங்களில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் , தொல்லியல் துறைக்குத் முதல்-அமைச்சர் மிகுந்த அக்கறையோடு ஆதரவு தருகிறார். இதனால் பல இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக, கீழடி அருங்காட்சியகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, பொரு நையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, தஞ்சாவூரில் சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மிக விரைவிலேயே அருங்காட்சியம் அமைப்பதற்கான பணி தொடங்கப்படவுள்ளது. இதே போல கங்கைகொண்ட சோழபுரத்திலும் அருங்கா ட்சியகம் அமைக்கப்படும் என்றார்.

    இக்கருத்தரங்கத்தில் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளு வன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×